தேசிய அரசு அமைப்பது தொடர்பில் எமது கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. அவ்வாறானதொரு யோசனையை ஜனாதிபதி முன்வைத்தால் அது குறித்து ஆராய்ந்து கட்சி உரிய முடிவை எடுக்கும் என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
தேசிய அரசமைப்பதற்கான யோசனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அனைத்து தரப்பினரும் இணைந்து ஆட்சியமைப்போம் என ஜனாதிபதி ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு எதிர்க்கட்சிகள் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தவில்லை.
நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை தீர்க்கும் நோக்கிலேயே தற்போதைய ஜனாதிபதிக்கு நாம் ஆதரவு வழங்கினோம். எமது எதிர்பார்ப்பை அவர் நிறைவேற்றியுள்ளார். நாட்டை மீட்கும் அவரின் முயற்சிக்கு ஆதரவு வழங்கப்படும்.” – எனவும் காமினி லொக்குகே குறிப்பிட்டார்.
