” அழுத்தங்களுக்கு மத்தியில் கல்வி அமைச்சு பதவியை தொடர்வதற்கு நான் விரும்பவில்லை. எவராவது பொறுப்பேற்க தயாரெனில் பதவி விலக நான் தயார்.” – என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உயர்தரப்பரீட்சை முடிவடைவதற்கு முன்னரே, விடைத்தாள் மதிப்பீடு விவகாரம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் நான் பேச்சு நடத்தினேன். அதற்கமைய அமைச்சரவை பத்திரத்தையும் முன்வைத்தேன். எனது தரப்பில் இருந்து செய்யக்கூடிய எல்லா விடயங்களையும் செய்தேன்.
உயர்தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நாளொன்றுக்கு 3000 ரூபாவரை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்தது. திறைசேரியின் கண்காணிப்பின்கீழ் இதனை வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டிருந்தது.
இது விடயத்தில் நான் தனிப்பட்ட ரீதியில் அதிக தலையீடுகளை மேற்கொண்டிருந்தேன். உயர் குருதி அழுத்தம் இருக்கும் நபரொருவராக இருந்திருந்தால் சிலவேளை உயிரிழந்திருக்கக்கூடும். கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே பணியை செய்கின்றேன். இவ்வாறு அழுத்தங்களுக்கு மத்தியில் செயற்பட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.
திறைசேரியும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அமைச்சரவை தீர்மானம் எடுத்து இரண்டு மாதங்களுக்கு பிறகே சுற்றுநிரூபம் வருகின்றது. கல்வித்துறையில் தற்போதுள்ள பிரச்சினைகள் தீராவிடின் நான் விரைவில் பதவி விலகுவேன்.
க.பொ.த. சாதாரணதரப்பரீட்சை மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும். உயர்தரப்பரீட்சையை ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.” என்றார்.
