இலங்கையின் பெரிய அண்ணன், ஆபத்துகளின்போது தோள் கொடுக்கும் உண்மையான தோழன், பரிதவிப்புகளின்போது நேசக்கரம் நீட்டி – வழிகாட்டும் காவலன் என்றெல்லாம் இலங்கையர்களால் போற்றி புகழப்படும் பாரத தேசத்துக்கும், இலங்கைக்கும் இடையிலான ‘உறவென்பது’, ‘வெளிவிவகாரத்தின்போது’ இரு நாடுகளுக்கிடையிலான ‘நட்பு’ என்பதைவிடவும் உணர்வுடன் – உள்ளங்களுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். அதனால்தான் ‘அணிசேரா’க் கொள்கையை பின்பற்றினாலும் வெளி விவகாரங்களின்போது டில்லிக்கு முதலிடத்தையும் – முன்னுரிமையையும் கொழும்பு வழங்கிவருகின்றது.
ஆயிரமாண்டுகாலமாக இரு நாடுகளுக்கிடையில் நல்லுறவு நீடித்துவரும் நிலையில், மதம், மொழி, கலை – கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களுடனும் இவ்விரு நாடுகளும் பின்னிப்பிணைந்துள்ளன. இலங்கையில் வாழும் மக்களுள் பெரும்பான்மையானோர் பௌத்த மதத்தையே பின்பற்றுகின்றனர். அரசமைப்பிலும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமையும் – முதலிடமும் வழங்கப்பட்டுள்ளது. அன்பையும், அஹிம்சையையும், தர்மத்தையும் போதிக்கும் இப்படியான புனித மதம் – தர்மம்கூட இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு வழங்கப்பட்டது.
இந்திய பேரரசர் அசோக மன்னன் ஊடாகவே பௌத்த மதம் இலங்கையில் வேரூன்றியது. இந்நிகழ்வின் பின்னரே இலங்கையின் சர்வதேச உறவுகூட ஆரம்பமானது என வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய தேசியக் கொடியில் இருக்கும் அசோக சக்கரம் இந்தியாவின் வெற்றியை பிரதிபலிக்கின்றது. அசோக சக்கரவர்த்தியின் கீழ் பௌத்த சமயம் இலங்கைக்கு வந்ததால் இலங்கைச் சமூகத்தின் ஆரம்பம் எவ்வாறு அமைந்தது என்பதை இந்திய தேசியக் கொடி பிரதிபலிக்கிறது என இலங்கையின் ஜனாதிபதிகூட அண்மையில் சுட்டிக்காட்டி, முக்கிய பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.
பூரணை (போயா) தினமொன்றிலேயே பெளத்த தர்மம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வானது ஆனி மாத பூரணை தினத்திலேயே நிகழ்ந்துள்ளது. அதனால் இப் பூரணை தினத்தையே ”பொசன்” பூரணை தினமாக பௌத்த மதத்தினர் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கின்றனர். பூரணை தினம் இந்தியாவிலும் புனித நாளாக போற்றப்படுகின்றது.
இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை, இலங்கையில் உள்ள சில அரசியல்வாதிகள், இது இந்தியாவின் குழந்தை, இலங்கைக்கு வேண்டாமென பிரச்சாரம் செய்தபோது, இந்தியாவில் இருந்து வந்ததால் ‘13’ ஐ வேண்டாம் எனக் கூறுபவர்கள், இந்தியாவில் இருந்து வந்த பௌத்த மதத்தையும் வேண்டாம் எனக் கூறுவார்களா என லக்ஷ்மன் கிரியல்ல, அமரர் மங்கள சமரவீர போன்றோர் கேள்விகளை எழுப்பியபோது, 13 ஐ எதிர்த்தவர்கள் பாராளுமன்றத்தில் வாயடைத்து மௌனியாகிய சம்பவம்கூட இடம்பெற்றுள்ளது. ஏன் இந்த விடயத்தை குறிப்பிடுகின்றோம் என்றால், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள பௌத்த தொடர்புகள், பிணைப்புகள் குறித்து தற்போதும் சிலரால் போலி கருத்துகள் விதைக்கப்பட்டுவருகின்றன. அவை ‘சந்தர்ப்பவாதம்’ என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
முடியாட்சியிலும்சரி தற்போதைய குடியாட்சியிலும்சரி இவ்விரு நாடுகளுக்கிடையிலான பௌத்த உறவென்பது சிறந்த நிலையிலேயே உள்ளது.
இரு நாடுகளுக்கிடையில் ஆன்மீக பயணங்கள் இடம்பெறுவதுடன், வெசாக் உள்ளிட்ட முக்கிய தினங்களில் இந்தியாவில் உள்ள புத்தரின் புனித சின்னங்கள் இலங்கையில் காட்சிப்படுத்தப்படும். இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த காலங்களில் இப்படியான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் புதிய சர்வதேச விமான நிலையமொன்று குஷிநகரில் 2021 ஒக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த விமான நிலையத்தில் 100 பிக்குகள் சகிதம் இலங்கையின் விமானமே முதலில் தரையிறங்கியது. புத்தரின் மறைவு இடம்பெற்ற உன்னதமான நந்தவனம் அமையப்பெற்ற குஷிநாரா நகரமே குஷிநகர் என்று அழைக்கப்படுகிறது. எனவே, கட்டுநாயக்க – குஷிநகர் நேரடி விமானம் இரு நாடுகளுக்கும் இடையிலான சமய உறவுகளில் ஒரு புதிய அத்தியாயமாக கருதப்பட்டது. தம்பதிவ செல்லும் இலங்கை பௌத்த யாத்திரீகர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுடையதாக உள்ளது.
அதேபோல இலங்கையில் வெசாக் பண்டிகை உள்ளிட்ட பௌத்த மக்களுக்கு முக்கிய தினங்களின்போது நடைபெறும் நிகழ்வுகளுக்கு இந்திய பிரதிநிதிகள் அழைக்கப்படுகின்றனர். குறிப்பாக இலங்கை – இந்திய பௌத்த உறவை மேம்படுத்துவதற்காக இரண்டு பில்லியன் ரூபாவை பிரதமர் மோடி 2022 இல் நன்கொடையாக வழங்கியிருந்தார். இவ்வாறு பல வழிகளிலும் தொடர்புகள் இன்றளவிலும் நீடிக்கின்றன என்பதற்கு மேலும் பல சான்றுகளும் உள்ளன. குறிப்பாக இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், இந்தியாவுக்கான இலங்கையின் முதலாவது பிரதிநிதியாக பௌத்த கல்வியலாளரான சேர் டி.பி. ஜயதிலக்கவையே இந்தியாவுக்கான தமது நாட்டு பிரதிநிதியாக இலங்கை நியமித்தது.
புத்தபெருமானின் வாழ்க்கை மற்றும் பௌத்தத்துடன் தொடர்புடைய பல்வேறு ஸ்தலங்கள் மற்றும் இடங்களை அடிப்படையாகக்கொண்டு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் 2021 இல் வினாவிடை போட்டியொன்றை ஆரம்பித்து வைத்தது. 14 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்காக இலங்கையில் நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 800 பிரிவேனாக்களில் இப்போட்டிகள் நடைபெற்றன.
இரு நாடுகளுக்கிடையிலான பௌத்த கலாசார பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. சோழர் காலத்தில்கூட இலங்கையில் பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டது எனவும், பௌத்த துறவிகள் இராஜ ராஜ சோழன்மீது நம்பிக்கை வைத்திருந்தனர் எனவும், ராஜராஜனின் உயிரைக்கூட பௌத்த துறவிகளே காப்பாற்றினர் எனவும் பொன்னியின் செல்வன் நாவலில் ‘கல்கி’ குறிப்பிட்டுள்ளார். வரலாறுகளில் மட்டுமல்ல இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த தொடர்புகள்,, பிணைப்புகள் எவ்வாறு சிறந்த மட்டத்தில் உள்ளன என்பதை தற்போதும் கண்கூடாக காண்கின்றோம்.