தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்டங்கள் இம்முறை தோட்ட வாரியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இது தொடர்பான உத்தியோகத்தர் சபை கலந்துரையாடல் கூட்டம் சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கு அமைய அட்டன் தலைமைப் பணிமனையில் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தொழிலாளர் தேசிய சங்கம் 1965 மே மாதம் முதலாந் திகதி ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 58 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது, 2025 இல் அதன் வைரவிழா கொண்டாடப்படவுள்ளது. அத்தோடு, இந்த ஆண்டில் இந்திய வம்சாவளி மக்கள் தென்னிந்தியாவீருந்து வருகை தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாவதை நினைவுகூரும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20 ஆந் திகதி நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாரிய நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
எனவே, இந்த ஆண்டில் மேதின விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதை தவிர்த்து, மலையகம் – 200 நிகழ்வுக்கு முன்னுரிமை தருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நுவரெலியா, அட்டன், மஸ்கெலியா, சாமிமலை, பொகவந்தலாவ, பத்தனை, கொட்டகலை, தலவாக்கொல்லை, லிந்துல, அக்கரபத்தன, டயகம, பூண்டுலோயா, நானுஓயா, இராகலை, புசல்லாவ, பதுளை பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களை மையமாக வைத்து மே முதலாந் திகதி கூட்டங்களை எளிமையான முறையில் அனுஷ்டிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான தலைவர் பழனி திகாம்பரம், பிரதித் தலைவர் எம். உதயகுமார் உட்பட முக்கியஸ்தர்கள் கூட்டங்களில் கலந்து கொள்வார்கள்.
வழமைபோல், மேதினத்தன்று அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சங்கத்தின் நலன் வேண்டி விஷேட பூஜை வழிபாட்டுடன் அட்டன் தலைமை அலுவலக வளாகத்தில் கொடியேற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.










