” 200 வருடங்களாகியும் மலையக பெருந்தோட்ட மக்கள் துன்ப நிலையில் இருந்து இன்னும் விடுபடவில்லை.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று 27/2 இன்கீழ் விசேட உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பட்டியலிட்டுக்காட்டி உரையாற்றிய சஜித் பிரேமதாச, அம்மக்கள் தொடர்பில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு, இன்னும் நிறைவேற்றப்படாத உறுதிமொழிகளையும் சுட்டிக்காட்டினார்.
” பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக் கூறப்பட்டாலும் அந்த தொகை உரிய வகையில் கிடைப்பதில்லை. இது அரசுக்கு தெரியுமா?” எனவும் அவர் வினா எழுப்பினார்.
தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை வைத்துக்கொண்டு அவர்களால் வாழ்க்கைச்செலவை சமாளிக்க முடியாதுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
” மலையக பெருந்தோட்ட சமூகத்தின் உழைப்பால்தான் இந்நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்றது. ஆனால் கல்வி, சுகாதார மற்றும் நலன்புரி விடயங்களில் அவர்களுக்கு பல குறைபாடுகள் உள்ளன. 200 வருடங்களாகியும் துன்ப நிலையில் இருந்து அவர்கள் விடுபடவில்லை.” எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டியதன் அவசியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.










