தனித்துவமான டிஜிட்டல் அடையாள திட்டம் நடைமுறையில்

இந்திய – இலங்கை இணைந்த திட்டமான ‘இலங்கை தனித்துவமான டிஜிட்டல் அடையாள திட்டம்’ (SL-UDI) நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கௌரவ கனக ஹேரத் தெரிவித்தார். அதற்கமைய, இந்த அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நபர்களின் சுய விபரங்கள், உயிரியளவியல் (biometrics) தகவல்களை (முகம், கருவிழி மற்றும் கைரேகை) பெற்று மத்திய அமைப்புக்குள் உள்வாங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான தொழிநுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் முதலாவது கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கௌரவ கனக ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், பிரஜைகளின் பிறப்புச் சான்றிதழ் முதல் அனைத்து ஆவணங்களையும் ஒரு தனித்துவமான இலக்கத்தின் கீழ் தகவல்களை டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பான பிரேரணை உள்வாங்கப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், செயற்பாட்டுப் பொறிமுறையில் காணப்படும் பலவீனம் காரணமாக அது தடைப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தாமதங்களையும் பின்னடவைவையும் ஏற்படுத்தும் கடந்த கால ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, ஒரு தொகுதியிலிருந்து புதிதாகத் தொடங்கி முன்னோக்கிச் செல்லும் வகையில் செயற்படுமாறு குழு அறிவுறுத்தியது.

Related Articles

Latest Articles