நானுஓயாவில் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – ஐவர் படுகாயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிலாரண்டன் பகுதியில் ஆட்டோவொன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை மாலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோ, ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் எதிர் திசைக்கு சென்று எல்லைக் கல்லில் மோதுண்டு 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஐவரும் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles