கடும் காற்றுடனான மழை காரணமாக நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதியில் மரமொன்றும் , மின் கம்பமொன்றும் முறிந்து விழுந்தில் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அனைத்து வாகனங்களும் மாற்றுவழியூடாக பயணிக்கின்றன.

இன்று புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் குறித்த மரமும் , மின் கம்பமும் முறிந்து விழுந்துள்ளதாகவும், இதன்போது எவருக்கும் காயமேற்படவில்லை என்றும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நுவரெலியா பிரதான நகருக்கு மின் இணைப்பை வழங்கும் கம்பம் முறிந்து விழுந்துள்ளமையால் பிரதான நகருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது அத்துடன் மின் கம்பிகள் எல்லாம் அறுந்து வீதியில் விழுந்துள்ளன. ஏனைய சில மின்கம்பங்களும் சேதம் ஏற்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் இப்பகுதிக்கு பொறுப்பான மின்சார சபைக்கு உடனே அறிவித்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு முறிந்த மின்கம்பத்தை மாற்றி ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாரிய மரங்கள் காணப்படும் இடங்களில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நானுஓய நிருபர்










