” தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் காழ்புணர்ச்சி அரசியலை கைவிட்டு மக்களுக்கு நேர்மையான அரசியலை செய்ய முன் வர வேண்டும்.” – என்று இதொகாவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதொகாவின் பிரதித் தலைவரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கணபதி கணகராஜ் தொடர்பில் சிவநேசன் விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காமராஜால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” கல்வியை பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டுமே கல்வித் துறையில் இருக்கின்ற அநியாயங்களும் அட்டூழியங்களும் தெரியும். அந்த வகையில் அண்மைக்காலமாக ஹட்டன் கல்வி வலயத்தில் நடைபெற்ற தான்தோன்றித்தனமான ஆசிரியர் இடமாற்றங்களினால் ஆசிரியர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
கணபதி கனகராஜை கைது செய்வதற்கு அவர் எந்தவொரு தவறான செயலில் ஈடுபட்டது கிடையாது. மாணவர்களை தவறாக வழிநடத்தியதும் கிடையாது. அவரிடம் கல்வி கற்றவர்களே ஏராளமாக இருக்கின்றனர் .
அந்த வகையில் பல சம்பவங்களுக்கு கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர்கள், மலையக கல்வியைப் பற்றியும், மாணவ நலன்களை பற்றியும் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரசும் அதை சார்ந்தவர்களும் ஆசிரியர் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை உற்று நோக்கி தீர்வை தேடுகின்றனர். சிவனேசன் போன்றவர்கள் இதில் குறை கண்டுபிடித்து அரசியல் நடத்த முற்படுகின்றனர். அதனால்தான் அவருடைய அரசியல் பிரதேச சபையோடு நின்று விட்டது.
சிவநேசன் காற்புணர்ச்சி அரசியலை கைவிட்டு மக்களுக்கு நேர்மையான அரசியலை செய்ய முன் வர வேண்டும் . ” – என்றுள்ளது.
