நமது நிருபர்கள் – நீலமேகம் பிரசாந்த, ராசையா கவிஷான்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை நடுக்கணக்கு தோட்டத்தில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தோட்ட தொழிலாளி ஒருவர் குளவி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (17) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஐந்து பிள்ளைகளின் தாயான 80 வயதான காளிமுத்து மாரியாய் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தோட்ட தொழிலில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்தாலும், வறுமை காரணமாக கைக்காசுக்கு வேலை செய்துவந்துள்ளார்.
பெருந்தோட்டங்களில் தேயிலை செடிகள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக செடிகளுக்கு அடியில் குளவிகள் கூடு கட்டி வாழுகின்றது எனவும், கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களை இவைகள் தாக்குவதால் தொடர்ந்தும் பாதிப்புக்கு உள்ளாகுவதாகவும் இவ்வாறான மரணங்கள் நிகழ்வதாகவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.
லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
