இந்தியாவின் தேவைக்காகவே 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் இந்தியாவை மகிழ்விக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் தரப்பும் செயல்படுகின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.
இவர்களின் ஏமாற்று நாடகங்களையும் துரோகத்தனத்தையும் எமது மக்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுத் தாம் நடத்திய ஊடக சந்திப் பின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் விக்னேஸ்வரன் தரப்பிற்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில்
கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் விக்னேஸ்வரன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி இருக்கிறார் எனவும் இதனை நடைமுறைப்படுத்துவதாக நம்பிக்கையும் வெளியிட்டு இருக்கின்றார் எனவும்
விக்கினேஸ்வரன் கூறியிருக்கின்றார்.
ஆனால் எங்களைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களால் நீண்ட காலமாக நிராகரிக்கப்பட்டு வந்த ஒரு சட்டம் மூலமே 13 ஆவது திருத்தச் சட்டம். தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக கொண்டுவரப்பட்டது. இருந்த போதும் தற்போது நடை
முறையில் உள்ள அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என விக்னேஷ்வரன் தரப்பும் கூட்டமைப்பும் கோரு வது மக்களுக்காக அல்ல.
தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற துரோகத்தனமான ஒரு செயற்பாடாகவே நாங்கள் இதனைப் பார்க்கிறோம். இந்த விக்னேஸ்வரன் தரப்பும் கூட்டமைப்பு இன்று ஒரே கருத்துடன் ஒரே அணியாகவே செயல்படுகின்றனர்.
இந்த 13 வது திருத்தத்தை தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வாகவோ தொடக்கப் புள்ளியாகவோ ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை.
இன்று நாடு பொருளாதார ரீதியாக பாதாளத்தில் இருக்கும் நிலைமையில் சர்வதேச தரப்பை நாங்கள் சரியான முறையில் கையாள வேண்டும். இந்த நேரத்தில் எங்களுக்கான தீர்வு சமஷ்டி அடிப்படையிலானது என்று சொல்லி அந்த சமஷ்டித்
தீர்வைப் பெறுவதற்கு நாம் சர்வதேச அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
அதற்கு மாறாக 13 ஆவது திருத்தத்தைக் கேட்டு அரசாங்கத்தை நெருக்கடியில் இருந்து விடுவிப்பதற்கு துணை போவது என்பது எமது மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம்.
இந்த நிலைமை தொடர்வது தமிழர்களின் எதிர்காலம் பலியிடப்படும் செயற்பாடாகவே இது அமையும்.
இந்தியாவின் தேவைக்காக, இந்திய -,மேற்கு நாடுகளின் முகவராக உள்ள ரணிலை அடுத்த தேர்தரிலும் வெல்ல வைப்பதற்கான முயற்சி நடைபெறுகின்ற இடத்தில் அவரை சிங்கள மக்கள் மத்தியில் நல்லவராக, வல்லவராக காட்டுவதற்கான
முயற்சியில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார்.
தமிழ் மக்கள் நம்பி வாக்களித்த போதும் அந்த நம்பிக்கையிற்கு மாறாக செயற்படுகிற விக்கினேஸ்வரன் போன்றவர்கள் உண்மையில் ஒரு நம்பிக்கை துரோகி. அவரெல்லாம் அடுத்த தேர்தலில் வெல்லப் போவதில்லை. இப்போது வெற்றிபெற வாக்களித்த மக்களே எதிர்வரும் தேர்தல்களில் அவரைத்
தோற்கடிப்பார்கள்.
சிங்கள மக்களாலே நிராகரிக்கப்பட்ட கட்சியாக இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியியை கட்டி எழுப்புவதற்கும் அதனோடு சேர்ந்த ஆதரவு கட்சிகளையும் வளர்ப்பதற்கான முயற்சியாக இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தக் கட்சிகளை வளர்ப்பதற்கான ஒரு பிரச்சாரத் தளமாகவே இந்த மாகாண சபை முறை தொடர்பில் பேசப்படுகிறது.
இந்த செயற்பாடு முழுக்க முழுக்க ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்பப்புவதாகவே அமையும். அந்தக் கட்சியின் மறை முக முகவராகவே இங்கே விக்னேஸ்வரன் செயற்பட்டு கொண்டிருக்கிறார் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே விக்கினேஸ்வரனின் இந்த நயவஞ்சக துரோகத்தனங்களில் எமது மக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. விக்கி போன்ற நயவஞ்சகத் துரோகிகளை தமிழ் மக்கள்
முற்றாக இனம் கண்டு நிராகரிக்க வேண்டும்.
இந்தியாவின் தேவைக்காகவே இந்த 13ஆவது திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி முன்னெடுக்கப்படுகின்ற நிலைமையில் அதனைப்பற்றி பற்றி பேசுவதன் மூலம் இந்தியாவைமகிழ்விக்க கூடியதாக இருக்கும்.
இந்தியாவிற்கு தேவைப்படுகிறது என்னவென்றால் ரணிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தாங்கள் சொல்வதை கேட்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
அதனூடாக தங்களுடைய இந்திய நலன்களை முதலில்
பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ஆகையினால் வட கிழக்கு சிங்களமயமாக்கல் செய்தாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு
வழங்குவதற்கும் அதனை எதிர்க்காத நிலையை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தங்கள் முகவர்கள் ஊடாக முன்னெடுக்கிறது. அதே போன்றுதான் 13 ஆவது திருத்தத்தையும் இந்தியா அனுகுகின்றதது.
இதேவேளை மாகாண சபையில் எதனையும் செய்ய முடியாது, எதுவுமே இல்லை என்று சொல்லி தமிழீழப்பிரகடனத்தை செய்து விட்டு சென்றவர் தான் வரதராஜபெரு
மாள். அதேபோன்று அடுத்ததாக வந்த முதலமைச்சர் பிள்ளையான் கூட ஒரு கதிரையை கூட வாங்க முடியாது, எதுவும் இல்லாத ஒன்று என்று சொல்லியிருந்தார். இதற்கு மேலாக இன்றைக்கு 13 அமுலாக்கம் தொடர்பில் பேசுகின்ற
விக்னேஸ்வரன் கூட 13 இல் எதுவும் இல்லை, எதனையும் செய்ய முடியாது என்று முதலமைச்சராக இருந்த காலத்தில் சொல்லியிருந்தார்.
ஆனால் இன்றைக்கு இந்தியாவின் தேவைக்காகவும் இந்தியாவின் விருப்பதற்காகவும் 13 குறித்து பேசுகின்றனர்.
இதுஅனைத்தும் எமது மக்களை ஏமாற்றுகின்ற நாடகம் என்பதுடன் இத்தகைய துரோகத்தனங்களை நயவஞ்சகங்களையும் எமது மக்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். – என்றார்.










