” பாதீட்டுக்கு பின் நீர் வழங்கல் கருத்திட்டங்களை நிறைவு செய்ய நடவடிக்கை” – ஜீவன்

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நீர் வழங்கல் கருத்திட்டங்கள் அனைத்தையும் வரவு – செலவு திட்டத்துக்குப் பின்னர் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இதொகாவின் பொதுச்செயலாளரும், தோட்ட உட்கட்டமைப்பு நீர் வழங்கல் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (03) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கில் கல்லாறு நீர் விநியோகத் திட்டம் உட்பட சில குடிநீர் திட்டங்கள் தொடர்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

கல்லாறு நீர் விநியோகத் திட்டம் ஒரு நீண்ட காலத்திட்டம். நான் அண்மையிலேயே இந்த அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றேன்.

எனினும், குறித்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் உங்களுடனும் அது தொடர்பில் கலந்துரையாடி, உரிய கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் நாம் மாகாண ரீதியில் கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

உடனடியாக அதனை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் இந்த திட்டம் தொடர்பில் எமது அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளாகிய உங்களுடனும் இணைந்து கலந்துரையாடி அதற்கு தீர்வு காண முடியும்.

வரவு – செலவுத் திட்டத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கிடையில் தீர்க்கப்பட வேண்டிய இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு ஓரளவு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

வரவு – செலவு திட்டத்தின் பின்னர் நீர் வழங்கல் தொடர்பான அனைத்து திட்டங்களையும் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டம் என்றாலும் இலங்கை அரசாங்கத்திற்கும் அதில் பெரிய பங்கு உள்ளது. சுமார் 30 திட்டங்கள் தற்போது கைவசம் உள்ளன. அவற்றை நிறைவு செய்ய வேண்டியுள்ளது.

அதேவேளை, குமாரசிறி ரத்நாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், நாட்டில் 13 மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் வரட்சி காரணமாக ஒரு லட்சத்து 90 ஆயிரம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

அவர்களுக்கு பவுசர்கள் மூலம் நீரை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் அந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Related Articles

Latest Articles