தலவாக்கலை, நகரில் உள்ள ஆடை அலங்கார பொருள் விற்பனை நிலையமொன்றின் ஊழியர்கள் 20 பேர், நச்சு புகையை சுவாசித்தமையினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையின் பின்னர் 16 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தலவாக்கலை, நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளை, கடையின் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால், ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகையின் காரணமாக, நிறுவன ஊழியர்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் இதன் பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் 16 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் 4 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லிந்துலை நிருபர்










