காசாவில் பேரவலம் தொடர்கிறது – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

காசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்றும் (09) சரமாரி குண்டுமழை பொழிந்ததோடு தரைப்படையினர் ஹமாஸ் போராளிகளுடன் வீதி வீதியாக உக்கிர சண்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் வடக்கு காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் பாதுகாப்பைத் தேடி தமது வீடுகளை விட்டு தெற்கை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் போர் வலயங்களில் போதுமான உணவு மற்றும் நீர் இன்றி மோசமான மனிதாபிமான நெருக்கடியை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் உள்ள இரு வீடுகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 30 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வாபா தெரிவித்துள்ளது.

இந்த வான் தாக்குதல்களில் பல டஜன் பேர் காயமடைந்திருப்பதோடு மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காசா நகரின் அல் சப்ரா பகுதியில் இருக்கும் மற்றொரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய கான் யூனிஸில் இருக்கும் அல் இக்லாஸ் பள்ளிவாசலுக்கும் அங்கிருக்கும் அல் முஸ்தபா பள்ளிவாசலுக்கும் இஸ்ரேல் நேற்று குண்டு வீசியது. இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் இதுவரை நான்கு பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டிருப்பதாக வாபா குறிப்பிட்டது.

இஸ்ரேல் கடந்த மூன்று நாட்களில் எட்டு மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முற்றுகை பகுதியில் போர் வெடித்த கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் 18 மருத்துவமனைகள் செயலிழந்திருப்பதாகவும் அது கூறியது.

வடக்கு காசா பகுதியில் உள்ள பெயித் லஹியா சிறு நகரில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக ஏ.பீ. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இரவிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்திருந்ததோடு வடக்கு காசாவை மையப்படுத்தியே போர் தீவிரம் அடைந்துள்ளது.

காசாவில் உயிரிழப்பு 11 ஆயிரத்தை நெருங்கி இருப்பதோடு மேற்குக் கரையிலும் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் எட்டுக் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்படி கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 171 உயர்ந்துள்ளது.

ஜெனின் நகரில் நேற்று அதிகாலை இஸ்ரேல் இராணுவம் நடத்திய சுற்றுவளைப்பிலேயே பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்திருப்பதோடு காயமடைந்த சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தரைவழி மோதல்

மறுபுறம் தரைவழி மோதலும் தீவிரம் அடைந்துள்ளது. ஹமாஸின் கோட்டையாக கருதப்படும் காசா நகரின் மையப் பகுதியை நோக்கி முன்னேறுவதாக இஸ்ரேல் கூறியிருப்பதோடு எதிரிகளுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

காசா நகரில் குண்டு வீச்சுக்கு மத்தியில் வீதிகளில் கடும் மோதல் இடம்பெறுவதை காட்டும் வீடியோவை ஹமாஸ் ஆயுதப் பிரிவு கடந்த புதனன்று (08) வெளியிட்டது. நிலத்தடி சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி அதிரடி தாக்குதல்களை நடத்தும் பலஸ்தீன போராளிகளின் எதிர்ப்பை இஸ்ரேலிய டாங்கிகள் சந்தித்து வருவதாக ஹமாஸ் மற்றும் மற்றொரு போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு காசாவின் ஜபலியாவில் உள்ள ஹமாஸ் புறக்காவல் நிலையத்தை 10 மணி நேர சண்டைக்குப் பின் கைப்பற்றியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை எக்ஸ் சமூகதளத்தில் தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக இஸ்ரேலிய தலைமை இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டனியோல் ஹகரி தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய போர் நிலை பொறியியலாளர்கள் வெடிபொருட்களை பயன்படுத்தி பல நூறு கிலோமீற்றர் நீண்ட சுரங்கப் பாதைகளை அழித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இதுவரை 130 சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய துருப்பினர் கடந்த புதனன்று காசா நகர விளிம்புப் பகுதிக்கு செய்தியாளர்களை அழைத்துச் சென்றிருந்தனர். அந்த நகரம் பேரழிவை சந்தித்திருப்பதை கண்டதாக அங்கு சென்ற செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டங்களின் சுவர்கள் தகர்ந்து அனைத்து இடங்களிலும் துப்பாக்கி குண்டுகளின் துளைகள் தெரிவதோடு பனை மரங்களும் துண்டாடப்பட்டு காணப்படுவதாக அவர்கள் விபரித்துள்ளனர்.

பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை போர் நிறுத்தம் ஒன்றை செயற்படுத்துவதை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இந்நிலையில் 6 அமெரிக்கர்கள் உட்பட 12 பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக ஹமாஸ் அமைப்புக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ஹமாஸுடன் தொடர்பு கொள்ள வழி இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை பேச்சாளர் ஜோன் கிர்பி, முயற்சிகளை சீர்குலைக்கும் என்பதால் விபரத்தை வெளியிட மறுத்துள்ளார்.

“அவர்களை (பணயக்கைதிகள்) அவர்களின் குடும்பங்களுடன் இணைப்பதற்கு எம்மால் முடியுமான அனைத்தையும் செய்வோம்” என்றும் அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்தை மறுக்கும் இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் ஆதரவு வழங்குவதோடு ஜப்பானில் புதன்கிழமை கூடிய ஜி7 வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டத்திலும் “மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் பாதைகளுக்கே” அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles