பாடசாலை மாணவர்களுக்கு பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை உட்கொள்ள கட்டாயப்படுத்தினார் எனக் கூறப்படும் பாடசாலை அதிபருக்கு உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நாவலபிட்டி, ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபருக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலையின் தரம் 11ல் கல்வி பயிலும் சில மாணவர்கள், மதிய உணவை பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை சுற்றி கொண்டு வந்துள்ளனர்.
இதனை அவதானித்த பாடசாலை அதிபர், குறித்த பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களையும் உட்கொள்ளுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தை எதிர்கொண்ட இரண்டு பாடசாலை மாணவர்கள் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நாவலபிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.