மரக்கறி தோட்டத்திற்கு இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி 30 வயது தந்தையும், அவரின் மூன்று வயது மகளும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொத்மலை , கொடகேபிட்டிய மா ஹிப்பலகம பிரதேசத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி குமார என்ற குடும்பஸ்தரும், அவரின் மூன்று வயது மகளான ஹபின்னியா என்ற சிறுமியுமே மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர்
உயிரிழந்த சூரிய மூர்த்தியின் மனைவி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் வெளிநாடொன்றுக்கு வேலைவாய்ப்பு பெற்று சென்றிருந்த நிலையில் சூரிய மூர்த்தி தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந் நிலையில் சம்பவதினமான நேற்று (29) தனது மகன்கள் இருவரையும் பாடசாலைக்கு அனுப்பிவைத்துவிட்டு பின்னர் 10 மணியளவில் தனது வீட்டுத்தோட்டத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த மிளகாய் செடிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கச் சென்றுள்ளார்.
இச் சந்தர்பப்பத்தில் விலங்குகளிடமிருந்து இரவில் பயிர்களை பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த மின் வேலியினை அகற்ற மறந்திருந்த சூரிய மூர்த்தி கிருமிநாசினி தெளித்த சமயம் மின்வேலியில் மோதி வீழ்ந்துள்ளதுடன் தந்தையின் அருகில் இருந்த சிறுமியையும் மின்சாரம் தாக்கியுள்ளது.
இந் நிலையில் அயல் வீட்டில் வசித்த சூரிய மூர்த்தியின் சகோதரன் உறவினர் ஒருவரின் மரண செய்தியை சொல்வதற்கு வந்த சந்தர்ப்பத்திலேயே இருவரும் மின்சாரம் தாக்கியுள்ளமையை கண்டுள்ளதுடன் அயலவர்களின் உதவியுடன் கம்பளை வைத்திய சாலைக்கு கொண்டுவந்த பொழுதும் அங்கு அவர்களை பரிசோதித்த வைத்தியர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
ஸ்தல விசாரனைகளை கம்பளை மாவட்ட நீதி மன்ற மேலதிக நீதவான் நிலந்த பிலபிட்டிய மேற்கொண்டதோடு மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸல்லாவை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கம்பளை நிருபர்










