அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ள விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
“நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அதிகாரத்திற்கு வந்தேன். ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் அந்த மாற்றம் நிகழாது என்பதை நான் அறிவேன். எனவே, நாட்டு மக்களுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். அதனால் எனது பதவி பறிபோனாலும்கூட அதனை மனப்பூர்வமாக ஏற்று விலகத் தயார்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கருத்துக்களுக்கும், தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தில் நீடிக்கும் என்ற தனது கூற்றுக்கும் இடையே எந்தவித முரண்பாடும் இல்லை என்று லால் காந்த கூறினார்.
ஒரு அரசியல் இயக்கம் அல்லது அரசாங்கத்தின் தொடர்ச்சியும், ஒரு தனிநபர் பதவியில் தொடர்வதும் இரு வேறு விடயங்கள் என்று அவர் விளக்கமளித்தார்.
எனவே, கண்டி மாவட்டத்தில் மீண்டும் போட்டியிட வேண்டாம் என்ற தனது முடிவு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்தை இழக்கும் என்பதற்கான அறிகுறியாகப் பொருள் கொள்ளப்படக் கூடாது.ஆள் மாறலாம். ஆனால் எங்கள் ஆட்சி தொடரும் என்றும் லால் காந்த சுட்டிக்காட்டினார்.
