191 உயிரைக் காவு கொண்ட மலையக விமான விபத்து: 49 வருடங்கள் கடந்தன….

1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10.10 இற்கு மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் – தெப்பட்டன் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்தோனேசியாவின் சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கிச் சென்ற மார்டின் எயார் டீ.சீ 8 ரக பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு, சப்த கன்னியா என அறியப்படும் ஏழு கன்னியர் மலையின் ஐந்தாவது குன்றின் மீது மோதி சிதறியது.

இதன்போது விமான ஓட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர்.

இதனையடுத்து, விபத்தில் பலியான 190 பேர் தெப்பட்டன் தோட்ட கொத்தலென பகுதியிலேயே புதைக்கப்பட்டனர்.

அடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமானப் பணிப் பெண்ணின் உடலை மட்டும் அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதில் அடங்கும்.

அத்தோடு, விபத்துக்குள்ளான விமான பாகங்களில் எஞ்சியிருக்கும் டயர்கள் இரண்டு மட்டும் இதுவரை பாதுகாக்கபட்டு வருகின்றது.

ஒரு டயர் நோட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ளது. நல்ல நிலையிலிருக்கும் டயர் நோட்டன் விமலசுரேந்திதர அணைக்கட்டுக்கும் செல்லும் வழியில் சம்பவங்ளை சுருக்கமாக தாங்கி பார்வைக்காக காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

விமானத்தின் கருப்புப்பெட்டி தகவலின் படி தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை இதுவரை வெளிநாட்டு விமானம் ஒன்றுக்கு ஏற்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும்.

மஸ்கெலியா நிருபர் – செதி பெருமாள், தலவாக்கலை நிருபர் கௌசல்யா

Related Articles

Latest Articles