மட்டக்களப்பு , வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பகுதியில் ‘பேய் விரட்டும்’ பூசாரி எனக் கூறப்படும் நபர் மேற்கொண்ட தாக்குதலில் ஆணொருவர் பலியாகியுள்ளார். மேலும் அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை நடத்திய பூசாரி தப்பியோடியுள்ளார்.
மட்டக்களப்பு, புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அனுர ஜெயலத் என்பவரே உயிரிழந்தவராவார். அவரது சகோதரியான 61 வயதுடைய சுமிதா ஜரங்கனி என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.
சகோதரியின் காலில் ஏற்பட்டிருந்த நோயை குணப்படுத்துவதற்காக, மாங்கேணி பிரதேசத்தில் உள்ள பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலயத்துக்கு இருவரும் அடிக்கடி சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவ தினமான கடந்த புதன்கிழமை இந்த சகோதரர் மற்றும் சகோதரியும் காரில் பௌத்த ஆலயத்துக்குச் சென்றனர்.
இந்நிலையில் தனது மனைவிக்கும், வந்த நபருக்கும் தொடர்பிருப்பதை அறிந்திருந்த பூசகர், அன்றைய தினம் தன்னை நாடி வந்த நபரதும் அவரது சகோதரியினதும் முன்னிலையில் மனைவியை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார்.
அப்போது பூசகரின் மனைவி அங்கிருந்து தப்பியோட, மனைவியுடன் தொடர்புடைய நபர் மற்றும் அவரது சகோதரி மீது பூசகர் தாக்குதல் நடத்தியுள்ளார்.










