வத்தளை, ஹெந்தலை பகுதியில் தமிழ் குடும்பமொன்றின்மீது தாக்குதல் நடத்தி அவர்களின் வீட்டை கைப்பற்ற முனைந்த ஆளுங்கட்சி உறுப்பினருக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம், ஒழுங்கு அமைச்சர் ராஜபகச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார்.
” வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் ராமலிங்கம் தங்கராஜா, விமலா சுப்பிரமணியம் என்ற தமிழ் குடும்பத்தை துன்புறுத்தி வீட்டை கைப்பற்ற முனைந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். இந்த குடும்பத்து தமிழ் பெண்ணை தாக்கியுள்ள நபர்களை கைது செய்யுங்கள்.
பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தவர்கள், வத்தளை பொலிஸ் நிலையத்தில் கடந்த மாதம் 4 ஆம், 13 ஆம் மற்றும் இம்மாதம் 7ஆம் திகதிகளில் முறைப்பாடுகள் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
யோஹான் விக்ரமசிங்க என்ற பொதுஜன பெரமுனவின் வத்தளை பிரதேச சபை உறுப்பினருக்கும், அவரை சார்ந்த நபர்களுக்கும் எதிராக முன்வைத்த முறைப்பாடுகள் தொடர்பில், வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செலோகம ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் கண்டறியுங்கள்.” – என்று மனோ கணேசன் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், ” இது தொடர்பில் எமது கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் உட்பட ஆதரவாளர்கள் மற்றும் சம்பந்தபட்ட குடும்பத்தினர் ஏன்னிடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளனர்.” என்று மனோ கணேசன் எம்பி, இன்று சட்ட ஒழுங்கு துறை அமைச்சர் சமல் ராஜபக்சவிடம், நேரடியாக எடுத்து கூறினார்.
இதன்போது ஆளும் கட்சி அரசியல்வாதியாக இருந்தாலும், இந்த பிரதேச சபை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அமைச்சர் சமல் ராஜபக்ச, மனோ கணேசனிடம் உறுதியளித்தார்.
இதையடுத்து, மனோ கணேசன் எம்பி, வத்தளைக்கு பொறுப்பான மேல்மாகாண வடக்கு பிரதி பொலிஸ் மாதிபர் விஜயஸ்ரீயை தொடர்பு கொண்டு, இவ்விடயம் பற்றி பிரஸ்தாபித்து, வத்தளை பொலிஸ் பொறுப்பதிகாரியின் அசமந்த போக்கு மற்றும் அரசியல் சார்ந்த செயற்பாடு பற்றி கவனிக்கும்படியும், வத்தளை கெரவலபிடிய பகுதியில் வசிக்கும் தமிழ் குடும்பங்களை அச்சுறுத்தி, அவர்களது காணி, வீடுகளை அபகரிக்கும் திட்டமா இது என விசாரிக்கும்படியும் அறிவுறுத்தினார்.
இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாக, பிரதி பொலிஸ் மாதிபர் விஜயஸ்ரீ, மனோ கணேசன் எம்பியிடம் உறுதியளித்தார்.
சற்று முன், வத்தளை பொலிஸ் பொறுப்பதிகாரி செலொகமவை தொடர்பு கொண்ட மனோ எம்பி, இத்தகைய முறைப்பாடுகள் உம்மீது வத்தளை வாழ் தமிழ் மக்கள் கூறாத வண்ணம் நடந்துக்கொள்ளும் என கூறியுள்ளார்.