நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீதான விவாதம், நாடாளுமன்றத்தில இன்று (24) இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
ஜனவரி மாதத்துக்கான இரண்டாம்வார நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று ஆரம்பமானது.
இதன்போது சபை நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி, நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார். இதற்கமைய கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது, அதன்பின்னர் நாடாளுமன்றம் மீண்டும் கூடியது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் எவ்வாறான திருத்தங்கள் முன்வைக்கப்படும் என்பன தெரியவில்லை, உயர்நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுள்ளனவா என்பது பற்றியும் தெரிய வேண்டும், எனவே, குறித்த சட்டமூலத்தை இன்று (நேற்று) விவாதத்துக்கு எடுக்கக்கூடாது, பிரிதொரு நாளுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கவும் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பனவும் எதிர்ப்பை வெளியிட்டன.
இதனையடுத்து நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நேற்று இரண்டாம் வாசிப்புக்கு விவாதத்துக்கு எடுப்பதா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது குறித்த யோசனைக்கு ஆதரவாக 83 வாக்குகளும், எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 30 மேலதிக யோசனைகளால் யோசனை நிறைவேற்றப்பட்டதால் விவாதம் ஆரம்பமானது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அவர் தமது உரையின்போது சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
ஊடகங்களை ஒடுக்குவதற்கு அல்ல
“சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுதல், கிளர்ச்சியை தூண்டும் வகையில் போலியான தகவல்களை பரப்புதல், சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம், இன, மத நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவிக்கின்றமை, போலியான தகவல்களை பரப்பி தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு , பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் செயற்படுதல், மத, காலாசார ரீதியிலான மோதல்களை உருவாக்குதல் போன்ற நபர்களை இலக்கு வைத்தே இச்சட்டமூலம் பிரதானமாக அமைந்துள்ளது.” – என்று அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டினார்.
அத்துடன்,, சிலர் கூறுவதுபோல் ஊடகங்களை ஒடுக்குதல், அரசியல் எதிராளிகளை ஒடுக்குதல் என்பன இதன் நோக்கம் அல்ல. ஜனாதிபதியால் ஆணைக்குழுவொன்று அமைக்கப்படும், அந்த குழுவில் ஐவர் இடம்பெறுவார்கள், அரசமைப்பு பேரவையின் அனுமதியுடன்தான் உறுப்பினர் தேர்வு இடம்பெறும். அந்த ஆணைக்குழுவால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய குற்றங்கள் அதிகரிப்பு
நிர்வாணப் படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுதல் உட்பட இணைய குற்றங்கள் தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்ற தகவலையும் இதன்போது அமைச்சர் வெளிப்படுத்தினார்.
“ பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 686 முறைப்பாடுகளும், நிர்வாணப் படங்கள் வெளியிடப்பட்டமை தொடர்பில் 506 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும், லட்சத்துக்கு மேற்பட்ட நிர்வாணப்படங்கள் வெளியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.” – எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“தனிப்பட்ட ரீதியில் அவதூறு ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் 697 முறைப்பாடுகளும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 34 முறைப்பாடுகளும், சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து ஆயிரத்து 961 முறைப்பாடுகளும், தகவல் திருட்டு தொடர்பில் 547 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
தேசிய பாதுகாப்புக்கு தாக்கம் ஏற்படுத்தக்கூடிய 88 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. நிதி மோசடி தொடர்பில் 657 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல் அல்ல அவர்களின் மனைவிமார், பிள்ளைகளை இலக்கு வைத்து அவர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி போலியான தகவல்கள் பரப்பட்டுவருகின்றன.
இவற்றை தடுப்பதற்கு எமக்கு சட்டம் அவசியம். சிஐடிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையே நான் தெரியப்படுத்தினேன், இதற்கு புறம்பாக பொலிஸ் மகளிர் பிரிவுக்கும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.” – எனவும் அமைச்சர் டிரான் அலஸ் விளக்கமளித்தார்.
அதேவேளை நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் ஆபத்தானது, அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என எதிரணி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.