கண்டி, புசல்லாவை பகுதியை வசிப்பிடமாகக்கொண்ட அதிபர் இராமு பத்மாவதி அவர்கள், மலையகக் கல்வித்துறையில் சுமார் 38 வருடங்கள் ஆசிரியராகவும், அதிபராகவும் அளப்பரிய சேவையாற்றி, தனது நீண்டகால அரச பாடசாலைப் பணியிலிருந்து இன்று 07.05.2026 ஓய்வுபெற்றார்.
கடந்த 1988 ஆகஸ்ட் 29 அன்று தனது முதல் நியமனத்தைப் பெற்றுக்கொண்ட இவர், கண்டி மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளில் பணியாற்றி மாணவர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.
கண்டி, புப்புரஸ்ஸ ஸ்டெலன்பர்க் தமிழ் வித்தியாலயத்தில் தனது முதல் நியமனத்தைப் பெற்று, அங்கு மூன்று ஆண்டுகள் (1988–1991) பணியாற்றினார்.
ஆசிரியர் பயிற்சி: நுவரெலியா – கொட்டகலை, யதன்சைட் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 1992 முதல் 1993 வரை முறையான ஆரம்பக்கல்வி ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்.
பயிற்சியின் பின்னர் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் ஓராண்டு காலம் (1994–1995) பணியாற்றினார்.
பிளக்பொரஸ்ட் தமிழ் வித்தியாலயத்தில் நீண்டகாலச் சேவை
அதிபர் இராமு பத்மாவதி தனது சேவைக்காலத்தில் மிக நீண்ட காலப்பகுதியை (சுமார் 25 வருடங்கள்) புசல்லாவ பிளக்பொரஸ்ட் தமிழ் வித்தியாலயத்திலேயே செலவிட்டார்.
இங்கு 3 ஆண்டுகள் ஆசிரியையாகவும், இரண்டரை ஆண்டுகள் பதில் அதிபராகவும், 20 ஆண்டுகள் அதிபராகவும் கடமையாற்றி, பாடசாலையின் பௌதீக மற்றும் கல்வி ரீதியான எழுச்சிக்குக் காரணமாக அமைந்தார்.
தனது சேவையின் இறுதிப் பகுதியாக புசல்லாவ ரொத்சைல்ட் தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 6 ஆண்டுகள் அதிபராகப் பணியாற்றி, இன்றுடன்(07.05.2026) தனது அரச கல்விப் பணியை நிறைவுசெய்தார்.
ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய அதிபர் இராமு பத்மாவதி அவர்களின் ஓய்வுக்கால வாழ்வு மனநிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும் அமைய எமது மனமார்ந்த வாழ்த்துகள்!










