சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சாணக்கியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு ,
” இந்த விடயம் தொடர்பில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளேன். குறிப்பாக, அனோஜனின் மேல்முறையீட்டு நடவடிக்கையை வெளிவிவகார அமைச்சும் இலங்கைத் தூதரகமும் எவ்வாறு கையாண்டன என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான பதில்களை கோருவேன்.
அனோஜன் ஆரம்பத்தில் சவுதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்தினால் பேஸ்புக் கருத்தொன்றுடன் தொடர்புபட்ட வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்தார்.
அப்போது, வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, இந்தத் தீர்ப்புக்கு எதிராக 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய முடியும் என அவரது குடும்பத்தினருக்கு அறிவித்திருந்தது.
ஆனால் அதே நேரத்தில், ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் பெற்ற சட்ட ஆலோசனையில், இந்த மேல்முறையீட்டின் மூலம் தண்டனையை குறைப்பதற்கோ அல்லது தீர்ப்பை மாற்றுவதற்கோ வாய்ப்பு மிகவும் குறைவு என மதிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அனோஜனின் குடும்பத்தினர் ஏற்கனவே மதத் தலைவர்களின் ஊடாக மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு மற்றும் கருணை நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.
எனினும், குடும்பத்தினர் என்னைச் சந்தித்ததல்ல; அவர்கள் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களைச் சந்தித்ததன் பின்னர் வழங்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து சட்டச் செலவுகளுக்காக கோரப்பட்ட ரூ. 1,890,766 தொகையை வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கில் குடும்பத்தினர் செலுத்தியுள்ளனர்.
இப்போது எனது முக்கியமான கேள்வி இதுதான்
தூதரகத்தின் சட்ட ஆலோசனையிலேயே மேல்முறையீட்டின் வெற்றிக்கான வாய்ப்பு மிகவும் குறைவு என தெரிவிக்கப்பட்டிருந்தால், குடும்பத்தினருக்கு மேல்முறையீடு செய்ய ஏன் அறிவுறுத்தப்பட்டது?
மேலும், குடும்பத்தினர் மேல்முறையீடு செய்யத் தீர்மானித்த பின்னர், அவர்கள் செலுத்திய பெருந்தொகையான சட்டக் கட்டணத்திற்கு எதிராக அரசாங்கம் எந்த வகையான பொறுப்பையும் மேற்பார்வையையும் மேற்கொண்டது என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
அமைச்சினால் பின்னர் வழங்கப்பட்ட ஆவணங்களின்படி, 24 ஆகஸ்ட் 2026 அன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவர்கள் அதற்கு முன்னரே மேல்முறையீடு செய்யுமாறு கோரியிருந்தனர். அதேவேளை, அமைச்சு மேல்முறையீட்டு ஆவணத்தை குடும்பத்தினருக்கு அனுப்பிய கடிதம் 16 செப்டெம்பர் 2026 எனத் திகதியிடப்பட்டுள்ளது.
இந்த காலதாமதம் குறித்தும் அரசாங்கம் விளக்கம் வழங்க வேண்டும்.
அதேபோன்று, மேல்முறையீட்டு ஆவணத்தில் அட்டர்னி அட்லான் அப்துல்லா அல்-சுபை என்பவர் சட்டத்தரணியாக குறிப்பிடப் பட்டுள்ளார். ஆனால் குடும்பத்தினரின் கூற்றுப்படி, நீதிமன்றத்தில் வேறொரு சட்டத்தரணியே முன்னிலையாகியுள்ளார்.
அந்த சட்டத்தரணி யார்?
அவரை யார் நியமித்தார்கள்?
அவருக்கு யார் அறிவுறுத்தல் வழங்கினார்கள்?
அவரது தொடர்பு விபரங்கள் ஏன் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை?
இந்தக் கேள்விகளுக்கும் வெளிவிவகார அமைச்சு பதிலளிக்க வேண்டும்.
எனவே, அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நான் பின்வரும் விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் பதில் கோர உள்ளேன்:
தூதரகத்தின் சொந்த சட்ட ஆலோசனையில் மேல்முறையீட்டின் வெற்றிக்கான வாய்ப்பு மிகவும் குறைவு என மதிப்பிடப்பட்டிருந்தும், குடும்பத்தினருக்கு ஏன் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது?
மேல்முறையீடு செய்வதால் ஏற்படக்கூடிய சட்ட மற்றும் மனிதாபிமான அபாயங்கள் தொடர்பில் என்ன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது?
நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணியை யார் தேர்ந்தெடுத்தார்கள்?
அந்த சட்டத்தரணிக்கு யார் அறிவுறுத்தல் வழங்கினார்கள்?
மேல்முறையீட்டு ஆவணங்கள் மற்றும் சட்டத்தரணியின் முழுமையான விபரங்கள் குடும்பத்தினருக்கு ஏன் முறையாக வழங்கப்படவில்லை?
குடும்பத்தினர் செலுத்திய ரூ. 1,890,766 சட்டக் கட்டணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது?
இந்த முழு நடவடிக்கையிலும் வெளிவிவகார அமைச்சும் இலங்கைத் தூதரகமும் மேற்கொண்ட மேற்பார்வை என்ன?
இந்த வழக்கை கையாள்வதில் தூதரக அல்லது இராஜதந்திர ரீதியில் ஏதேனும் தவறு ஏற்பட்டதா?
எனினும், இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெறுவது முக்கியமானதாக இருந்தாலும், அதைவிட முக்கியமானது தற்போது சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதுதான்.
17 செப்டெம்பர் அன்று வெளியான செய்திகளின்படி, மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜனுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் தொடர்பில் சவுதி அரேபிய அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வமான தீர்ப்பின் முழுமையான பிரதியையும் வழக்கு நடவடிக்கைகளின் பதிவுகளையும் இலங்கை அரசாங்கம் உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதனுடன் நிறுத்திக்கொள்ளாமல், சவுதி அரேபிய சட்ட நடைமுறைகளை நன்கு அறிந்த, அனுபவமிக்க மற்றும் சுயாதீனமான சட்டத்தரணியின் சட்ட உதவியை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும்.
கிடைக்கக்கூடிய அனைத்து சட்டரீதியான மேல்முறையீட்டு மற்றும் மறுஆய்வு வாய்ப்புகளையும் ஆராய வேண்டும்.
அதேவேளை, மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு மற்றும் மரண தண்டனையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
இது ஒரு சாதாரண தூதரக நடவடிக்கையாக கருதப்படக்கூடிய விடயம் அல்ல. ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் தொடர்பான விடயம்.
எனவே, வெளிவிவகார அமைச்சர் இந்த விடயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சருடன் நேரடியாக தொடர்புகொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால், சவுதி அரேபிய இராச்சியத்தின் மிக உயர்ந்த பொருத்தமான மட்டத்தில் இலங்கை அரசாங்கம் தலையீட்டை கோர வேண்டும்.
சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தேவையான மிக உயர்ந்த மட்டத்தில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.” – என்று சாணக்கியன் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த பாத யாத்திரை ஆரம்பமாகியிருந்தது.
வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் வழியாக பக்தர்கள் குழுவாக பாத யாத்திரை வருவதை ஒவ்வொரு வருடமும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இவ்வாறு இம்முறையும் வடக்கிலிருந்து பெருந்திரளான பக்தர்கள் பாத யாத்திரை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், ஒரு குழுவுடன் சுப்ரமணியம் என அழைக்கப்படும் நாய் ஒன்றும் பாத யாத்திரையில் கலந்து கொண்டது.
பக்தர்களுடன் இந்த நாய் பாத யாத்திரையில் கலந்துக்கொண்ட சம்பவம் அப்போது சமூக ஊடகங்களில் பெரும் பேசு பொருளாகியிருந்தது.
இவ்வாறு வருகைத் தந்த பக்தர்கள், கல்முனை பகுதியை நெருங்கிய தருணத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கல்முனை பகுதியிலுள்ள இளைஞர் ரஷ்மின் என்பவர், பாத யாத்திரை சென்ற சுப்ரமணியம் என்ற நாயை, தனது கால்களினால் மிதித்து தாக்குதல் நடாத்தியிருந்தார்.
குறித்த இளைஞன் தாக்குதல் நடாத்திய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதுடன் இது தொடர்பான கடும் விவாதங்களும் நடந்தன.
இந்தச் சம்பவம் தொடர்பில் கல்முனை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, நாயின் மீது தாக்குதல் நடாத்திய இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த இளைஞன் தனது தவறை ஏற்றுக்கொண்டு, பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார். கல்முனை போலீஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், ஃபேஸ்புக் பக்கத்தில் நாயின் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் குறித்த பதிவொன்றின் கீழ், அனோஜன் கருத்து ஒன்றை பதிவேற்றியிருந்தார்.அந்த கருத்தே பெரும் சர்ச்சையாக மாறி, அவர் கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்தது.










