அரகலய இன்னும் ஓயவில்லை: அநுர அரசுக்கு எச்சரிக்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு எதிரான திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில், நாட்டில் நிச்சயம் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும், ‘அரகலய’ இன்னும் ஓயவில்லை என்றும் முன்னிலை சோஷலிசக் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்பாக நேற்று (27) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்திய இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் நியாயமான போராட்டங்களுக்கு எங்களது முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றோம். அதேவேளையில், போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு முற்படும் மோடி அரசாங்கத்தின் அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்தியாவில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி நிலவுவதாகக் கூறப்பட்டாலும், அங்குள்ள சாமானிய மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை என்பது தெளிவாகிறது. வேலைவாய்ப்பின்மை உட்பட பல்வேறு கடுமையான சிக்கல்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தியாவில் தேர்தலில் வெற்றிபெற்று மோடி அரசு மீண்டும் ஆட்சியமைத்த போதிலும், குறுகிய காலத்திற்குள் மக்களின் போராட்டத்திற்கு முன்னால் அரசாங்கம் மண்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. கல்வி அமைச்சரும் பதவி விலக நேரிட்டது.

எனவே, இலங்கையிலுள்ள தற்போதைய ஆட்சியாளர்களும் இதிலிருந்து உரிய பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்; தவறினால் மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவார்கள்.” – என்றார் துமிந்த நாகமுவ.

Related Articles

Latest Articles