இரத்தினபுரி போதனா மருத்துவமனையின் புதிய சிறுவர் நோயாளர் விடுதிக் கட்டிடத்தொகுதியில் நான்காவது மாடியில் ‘சிறுவர் தீவிர சிகிச்சை’ பிரிவை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள பிரதான மூன்றாம் நிலை சுகாதார சிகிச்சைகளை வழங்குகின்ற நிறுவனமான இரத்தினபுரி போதனா மருத்துவமனை மூலம் விரிவான மருத்துவ சேவைகள் வழங்கப்படுவதுடன், அது தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளமையால் மருத்துவக்கல்வி மற்றும் ஆய்வுகளின் முன்னேற்றங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குகின்றது.
2016.07.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம், குறித்த மருத்துவமனையின் சிறுவர் நோயாளர் விடுதிக் கட்டிடத்தொகுதிக்கு ஐந்துமாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக நிதியுதவி வழங்குவதற்காக முன்வந்த உள்நாட்டு கொடையாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, தற்போது அக்கட்டிடம் மூன்றாம் மாடி வரைக்கும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் தீவிர சிகிச்சைப் பிரிவை நிறுவுவதற்காக புதிய நோயாளர் விடுதியை நான்காம் மாடியில் நிர்மாணிப்பதற்காக நிதியுதவியை வழங்குவதற்காக மீண்டும் உள்நாட்டு நன்கொடையாளர்கள் முன்வந்துள்ளனர்.
குறித்த கருத்திட்டத்திற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் விதந்துரையும் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதற்கமைய, கருத்திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுச் செலவு 64.15 மில்லியன் ரூபாய்களை உள்நாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, இரத்தினபுரி போதனா மருத்துவமனையின் புதிய சிறுவர் நோயாளர் விடுதிக் கட்டிடத்தொகுதியில் நான்காவது மாடியில் ‘சிறுவர் தீவிர சிகிச்சை’ பிரிவை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் ஏற்புடைய நன்கொடையாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.










