ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா அபிவிருத்திக்கு பயன்படுத்த அமைச்சரவை அனுமதி

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளதும், தற்போதைய ஜனாதிபதியின் பயன்பாட்டில் இல்லாததுமான ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலாத்துறையின் முதலீட்டுத் திட்டங்களுக்காக நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடமைகள் மற்றும் தனிப்பட்ட ஓய்வு நேரங்களுக்காகப் பராமரிக்கப்பட்டு வரும் இந்த மாளிகைகள், தற்போது ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருவதோடு, அவற்றைப் பராமரித்தல், பாதுகாப்பு வழங்குதல் மற்றும் ஏனைய செலவுகளுக்காகப் பெருமளவிலான அரச பணம் செலவிடப்பட்டு வருகின்றது.

மிகவும் உயர் கட்டிடக்கலை மற்றும் பொருளாதாரக் மதிப்பைக் கொண்ட, முழுமையான வசதிகள் மற்றும் கவர்ச்சிகரமான நிலப்பரப்புகளைக் கொண்ட இந்த மாளிகைகளைப் பொருளாதார ரீதியாகப் பலனுள்ள முறையில் பயன்படுத்துவதைக் நோக்கமாகக் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான பங்களாக்கள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளைப் பொருளாதார ரீதியாகப் பலனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கான வழிமுறையை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பின்வரும் பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா முதலீட்டுத் திட்டங்களுக்காக முன்மொழிவுகளைக் கோரி, பொருத்தமான முதலீட்டாளர்களுக்குக் குத்தகைக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது:

பெந்தொட்டை

கதிர்காமம்

மஹியங்கனை

எம்பிலிப்பிட்டிய

அனுராதபுரம்

இந்த யோசனை ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Related Articles

Latest Articles