“செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இன்னும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே இடம்பெற்றுவருகின்றது. குற்றவாளிகள் பற்றிய தகவல் இல்லை. அதை நோக்கிய விசாரணை இன்னும் ஆரம்பமாகவில்லை.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, செம்மணி புதைகுழி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய தலையீடுகளை மேற்கொண்டுள்ளது. அகழ்வுப் பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகத் தேவையான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த முயற்சியை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
முதற்கட்டமாக, அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் யாருடையவை என்பதை அடையாளம் காண வேண்டும். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, டி.என்.ஏ (DNA) பரிசோதனை உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
குற்றவாளிகளை அடையாளம் காண்பது அவசியமானது; ஆனால் தற்போது வரை அவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. விசாரணை இன்னும் அந்த நிலையை அடையவில்லை. தற்போது ஆரம்பக்கட்டமாக எலும்புக்கூடுகளை மீட்கும் பணிகளே நடைபெற்று வருகின்றன.
செம்மணி என்பது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு பகுதியாகும். குறுகிய காலப்பகுதிக்குள் அப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள், இந்திய இராணுவம் மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும், இந்த விவகாரத்தில் முறையான மற்றும் துல்லியமான விசாரணை நிச்சயமாக நடத்தப்படும்,” என நீதி அமைச்சர் உறுதியளித்தார்.
