மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ள நிறுவனங்களில் சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்களும் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள மத்தள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை (MRIA) இயக்குவதற்காக அரசாங்கம் விருப்பக் கோரிக்கைகளை (Expressions of Interest – EoI) கோரியிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், சீனாவிடமிருந்து பெறப்பட்ட சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியுடன் மத்தள விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டது. இந்த விமான நிலையம் 2013ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
விருப்பக் கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஆரம்பத்தில் ஜூன் 8ஆம் திகதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டது.
இந்த நடைமுறையின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுவரை 19 முன்மொழிவுகள் கிடைத்துள்ளதுடன், அவை தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.
முதலீட்டு முன்மொழிவுகளை சமர்ப்பித்த நிறுவனங்களில் சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் உள்ளனவா என கேள்வி எழுப்பப்பட்டபோது, துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க அதனை உறுதிப்படுத்தினார்.
அத்துடன், ஓமானைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்தும் முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.










