கொட்டகலை நகரில் இன்று நடைபெற்ற திருமண வைபமொன்றின்போது திருமண மண்டபத்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டகலை நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வின்போது மதுபோதையில் இருந்த இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு விரைந்த திம்புள்ள பத்தனை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளனர்.
எனினும், கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிலர் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து,
பொலிஸ் அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பொலிஸார்மீது தாக்குதல் நடத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த சிலர் சிகிச்சைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு பொலிஸ் அதிகாரிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஏனைய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் திம்புல்ல – பத்தனை பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவத்தால் கொட்டகலை நகரில் பெரும் பதற்றமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.










