தற்போது ஆட்சியில் இருக்கும் திசைகாட்டி அரசாங்கமானது ஜனநாயத்தைப் புதைத்துவிட்டு, நாட்டில் ஒரு சர்வாதிகாரத் தனிக்கட்சி ஆட்சியை உருவாக்குவதற்குத் தீவிரமாக முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று (19) கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் “ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுமக்கள் கருத்தாடல் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
“நீதித்துறை தொடர்பாக சர்வதேச ரீதியில் கட்டியெழுப்பப்பட்ட பல உடன்படிக்கைகளும் இணக்கப்பாடுகளும் வரலாற்றில் காணப்படுகின்றன.
மெசபடோமியா, எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமானிய யுகங்கள் முதல் மாக்னா கார்ட்டா (Magna Carta) வரை, மத்திய கால இங்கிலாந்தின் பொதுச் சட்ட உருவாக்கம், 1787 அமெரிக்க அரசியலமைப்பு, 1948 மனித உரிமைகள் பிரகடனம், 1966 சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனம் மற்றும் 1985 நீதித்துறை சுதந்திரம் தொடர்பான அடிப்படை விழுமியங்கள் போன்ற பல முற்போக்கான சட்டப் படிகள் வரலாற்றில் எடுக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகாரப் பரவலாக்கம், அவற்றுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகள் (Checks and Balances) மூலமே ஜனநாயகம் பலம்பெறுகின்றது. இந்த ஜனநாயகக் கட்டமைப்பின் மூலமே அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
நீதித்துறை எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு ஜனநாயகம் வலுப்பெறும். இந்த சர்வதேச கொள்கைக் கோட்பாடுகள் நமது நாட்டிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், சிலருக்கு இந்த சர்வதேச கோட்பாடுகளும் இணக்கப்பாடுகளும் எதிர்க்கட்சியில் இருக்கும்போது மட்டுமே நினைவுக்கு வருகின்றன. ஆட்சி அதிகாரம் கிடைத்தவுடன், தங்களது அதிகார மையங்களை உறுதிப்படுத்துவதற்காக அவற்றை மறந்துவிடுகின்றனர்.
இன்று வரை உயர் நீதிமன்றங்களில் பல நீதிபதிகளை நியமிக்க வாய்ப்பிருந்தும், அரசாங்கம் அந்த நியமனங்களைச் செய்யாமல் இழுத்தடித்து வருகின்றது. இவ்வாறு நீதிபதிகளை நியமிக்காதிருப்பது அடிப்படை உரிமை மீறலாகும் என்பதுடன், நீதித்துறைக்குச் செய்யப்படும் முறையற்ற அழுத்தமுமாகும்.
உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தம் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்காமல், இந்த விவகாரத்தை மட்டும் அரசாங்கம் கையில் எடுப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. நாடாளுமன்றத்தில் இது குறித்துக் கேள்வி எழுப்பியபோது, அத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் இல்லை என்று அரசாங்கம் பொய் உரைத்தது.
முழுமையாக ஜனநாயகத்தை அழிக்கும் வேலையையே அரசாங்கம் தற்போது செய்ய முற்படுகின்றது. இதன் மூலம் நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, மக்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
திசைகாட்டி மக்கள் ஆணையை காலில் மிதித்துச் செயற்படுகிறது
இதற்குப் பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், தாம் பெற்ற மக்கள் ஆணையைத் துரோகம் செய்துள்ளது. ஜனநாயகத்திற்குப் பதிலாக சர்வாதிகாரத் தனிக்கட்சி ஆட்சியை நிலைநாட்ட முற்படுகிறது.
அரசாங்கத்தின் இந்த ஆபத்தான போக்கு குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்களுடன் ஒன்றிணைந்து இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையைத் தோற்கடிக்க வர்க்கம், நிறம், கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.
அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக நாம் திரள வேண்டும்
அரசாங்கத்தின் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக, சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற நிறுவனங்களிடமிருந்து அழுத்தங்கள் ஏற்பட்டுப் பொருளாதாரச் சவால்கள் மீண்டும் எழக்கூடும்.
அரசாங்கத்தின் இந்தத் திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் கொண்டுள்ள கருத்தை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகைக்கும் இதன் மூலம் பாதிப்பு ஏற்படக்கூடும்.
எனவே, மக்கள் சக்தியால் இந்தத் தவறான நடவடிக்கையைத் தோற்கடிக்க வேண்டும். நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்பட்ட இருண்ட காலகட்டங்கள் கடந்த காலத்தில் இருந்திருக்கலாம், ஆனால் அத்தகைய சூழல் மீண்டும் நாட்டில் ஏற்படக்கூடாது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.










