22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இல்லாத பேயொன்றை காண்பிக்க முற்படாதீர்!

“அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இல்லாத மாய பூதம் ஒன்றைக் காண்பிப்பதற்கு எதிர்க்கட்சியினர் முற்படுகின்றனர். அச்சுறுத்தல் தரக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. அரசியலமைப்புக்கு உட்பட்டே நாம் செயல்படுகிறோம்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் உள்ளிட்ட இரு சட்டமூலங்கள் தொடர்பில் போலிப் பூதம் ஒன்றைக் காண்பிக்க எதிர்க்கட்சியினர் முயல்கின்றனர். அச்சப்படும் வகையில் இதில் எதுவுமில்லை.

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் முழுமையான தகவல்களை வெளியிடாமல், அரைகுறைத் தகவல்களை வழங்கி மக்களைத் தவறாக வழிநடத்தியுள்ளனர். இவ்வாறே அவர்கள் கருப்புப் பேயைக் காட்ட முற்படுகின்றனர்.

நாங்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துப் பேசினோம். அவர்களுக்கும் தவறான தகவல்களே வழங்கப்பட்டிருந்தன. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது என மகாநாயக்க தேரர்களிடம் கூறப்பட்டிருந்தது.

நாங்கள் அவர்களை நேரில் சந்தித்து இதன் உண்மையான நோக்கத்தை விளக்கிக் கூறினோம். நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற நல்ல காரியங்களைச் செய்வதற்குத் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அவர்களும் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையால் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாது. எந்தவொரு தனிநபரையும் இலக்கு வைத்து இது கொண்டுவரப்படவும் இல்லை.

இவ்விஷயத்தில் ஒருதலைப்பட்சமாகவோ அல்லது அவசரப்பட்டுத் தன்னிச்சையாகவோ அரசாங்கம் செயல்படவில்லை. அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைவாகவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு குறித்து உயர் நீதிமன்றமே இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Related Articles

Latest Articles