பசறை கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளதாகப் பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பசறை தபால் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் சுமார் 75 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
பசறை நகரில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த ‘டபுள் கெப்’ (Double Cab) ரக வாகனம் ஒன்று, எரிபொருள் நிரப்புவதற்காகச் வீதி ஓரமாக அமைந்திருந்த எரிபொருள் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளது.
இதன்போது, வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த குறித்த முதியவர் மீது வாகனம் மோதியுள்ளதுடன், அவரது காலின் மீதும் வாகனத்தின் சக்கரம் ஏறியுள்ளது.
விபத்தில் காயமடைந்த முதியவரை, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்பு முச்சக்கரவண்டி மூலம் பசறை வைத்தியசாலையில் அனுமதித்துச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
த. டிமேஷன்
