” EPF செலுத்த தவறியுள்ள சில பெருந்தோட்ட நிறுவனங்கள்” – அம்பலமாகியுள்ள பகீர் தகவல்

சில பெருந்தோட்டத்துறை நிறுவனங்கள் EPF கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும், பாரியளவான நிலுவை ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டி உள்ளதாகவும் வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் புலப்பட்டது.

பெருந்தோட்டத்துறையில் சில நிறுவனங்களினால் செலுத்தப்பட்ட சுமார் 700 மில்லியன் ரூபா தொகை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் முரண்பட்ட நிலைமை காரணமாக கணக்கில் பதிவுசெய்ய முடியாமல் உள்ளதாகவும் குழுவில் புலப்பட்டது.

வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

ஊழியர்களை பாதுகாத்துக்கொண்டு, ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டிய நிலுவையையும் மாதாந்தக் கொடுப்பனவையும் முறையாகச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், தேசிய அடையாள அட்டை இலக்கத்துக்கு அமைய கணக்குகளை ஆரம்பிப்பதன் மூலம் ஒரு நபருக்குப் பல கணக்குகள் காணப்படும் சிக்கலை நீக்க முடியும் எனவும், அது தொடர்பில் கவனம் செலுத்தி செயற்படுமாறும் அதிகாரிகளுக்குக் குழு ஆலோசனை வழங்கியது.

Related Articles

Latest Articles