தற்போதைய அரசாங்கத்தால் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை இதுவரை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
“தற்போது விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் வயல்களில் இறங்கி, ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் எனக் கூறி வாக்குறுதி அளித்தனர். ஆனால், இன்று வேண்டுமென்றே விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில், கிலோவுக்கு 120 ரூபாய் நிலையான விலையை நிர்ணயிக்க அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளது.
இதனிடையே, ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபாய் செலவாகிறது என விவசாய அமைச்சரே குறிப்பிடுகிறார். எதிர்க்கட்சியில் இருந்தபோது விவசாயிகளின் துயரம் குறித்துப் பேசி, ‘விவசாயிகளை ராஜாவாக்குவோம்’ எனக் கூறிய அரசாங்கம், இன்று அவர்களைக் கடனாளிகளாக மாற்றி ஏமாற்றியுள்ளது.
நெல் விலை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பும்போது அரசாங்கம் பதிலளிக்காமல் ஒதுங்கிச் செல்கிறது. இன்று விவசாயிக்கு ஒரு கிலோ நெல்லுக்கு 17 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.”
தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்
“விவசாயிகளுக்கு மட்டுமன்றி, மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் மீறி வருகிறது. அண்மைக்காலமாகத் தோட்டப் பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன. ராகலை, லெனார்ட் தோட்டத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்த 6 குடும்பங்கள் அண்மையில் அங்கிருந்து வீதிக்கு இறக்கப்பட்டுள்ளனர்.
1889ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க தோட்டத் தொழிலாளர் (இந்திய) கட்டளைச் சட்டத்தின் (Estate Labour (Indian) Ordinance) பிரிவு 24(1) இன் படி, குடியிருப்புகளில் வசிக்கும் ஒவ்வொரு திருமணமான தம்பதிக்கும் நிர்வாகம் வீட்டு வசதியை வழங்க வேண்டும். ஆனால், அரசாங்கக் காணி மீட்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, இம்மக்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றி வருகின்றனர். தேர்தல் காலத்தில் காணி உரிமை தருவதாகக் கூறி ஏமாற்றிய அரசாங்கம், தற்போது அவர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
டெங்கு பரவலும் சுகாதார அமைச்சரின் மௌனமும்
“நாட்டில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் சுகாதார அமைச்சர் மௌனம் காக்கிறார். இதுவரை 77,044 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டுகளை விடக் கூடுதலான எண்ணிக்கையாகும். இதைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் தெளிவான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. டெங்கு ஒழிப்புப் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாகக் கூறிய வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.”
அழிவை நோக்கிச் செல்லும் சுதேச ஆயுர்வேதத் துறை
“அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கைகளால் உள்நாட்டுச் சுதேச மருத்துவத் துறை முடக்க நிலையைச் சந்தித்துள்ளது. 700 மாணவர்களுக்கான எழுத்து மற்றும் வாய்மொழிப் பரீட்சைகள் கட்டணம் செலுத்தப்பட்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மரபுவழி மருத்துவப் பயிற்சிகளை வழங்கிய 11 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், சுதேச மருந்துகளின் உள்நாட்டுப் போக்குவரத்திற்குக் கூடத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து மூலிகைகளை இறக்குமதி செய்வதால் அந்நியச் செலாவணியும் வீணாகிறது.
பாரம்பரிய மருத்துவத்தைப் பாதுகாக்கத் தேசிய அளவிலான திட்டமும், யாப்பஹுவ பகுதியில் உள்ள அங்கம்போர மையத்தை பலப்படுத்தும் திட்டங்களும் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.”
வரலாறு மற்றும் அழகியல் பாடங்களைக் கட்டாயமாக்குக!
“தொகுதி (Module) முறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் குறித்து அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். தேசியப் பாடசாலைப் பாடத்திட்டத்தில் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் மீண்டும் கட்டாயப் பாடங்களாகச் சேர்க்கப்பட வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
