நமுனுகுலையிலிருந்து மியனகந்துர வரையிலான சுமார் 15 கிலோமீட்டர் தூர வீதியில், 5 கிலோமீட்டர் பகுதி நீண்டகாலமாக குன்றும் குழியுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, தோட்டத் தொழிலாளர்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
படால்கும்பர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தன்னக்கும்புர, மாதுளாவத்தை, பூட்டாவத்தை, தேவத்தன்ன, தன்னக்கும்புர மேற்பிரிவு ஆகிய தோட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இச் சீரற்ற வீதியால் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக அவர்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டனர்:
கல்வி பாதிப்பு:
கோணக்கலை, நியூபோக் மற்றும் கனவரல்ல ஆகிய தமிழ் வித்தியாலயங்களுக்குச் செல்லும் மாணவர்கள் நாள்தோறும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
கர்ப்பிணித் தாய்மார்களை அவசரத் தேவைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதில் பாரிய சிக்கல்கள் உள்ளன. சில நேரங்களில் உரிய நேரத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாததால் உயிரிழப்புகள் கூட நிகழ்ந்துள்ளதாக ஊர்மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
தமது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொழிலுக்குச் செல்லாது தன்னக்கும்புர பாடசாலைக்கு அருகாமையில் ஒன்று திரண்ட மக்கள், அங்கிருந்து பேரணியாக நமுனுகுலை நகர் நோக்கி நகர்ந்தனர். கறுப்புக் கொடிகளையும் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியவாறு சுமார் 3 கிலோமீட்டர் தூரம் அவர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில், தோட்ட மக்களின் நியாயமான போராட்டத்தைக் கண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவரும் அவர்களுடன் இணைந்து வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
போக்குவரத்துத் தடை மற்றும் தீர்வு:
ஆர்ப்பாட்டக்காரர்கள் நமுனுகுலை நகரில் வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பசறையிலிருந்து பண்டாரவளை செல்லும் வீதியூடான போக்குவரத்து சுமார் 5 மணிநேரம் ஸ்தம்பித்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஊவா மாகாண ஆளுநருடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தைப் பெற்றுக்கொள்ள ஆளுநரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக அவர் உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
R.Tபசறை
