ஐரோப்பிய நாடுகளை கடந்த மாதம் வாட்டி வதைத்த கடும் வெப்ப அலையால் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் 3,700 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 20 முதல் 28 வரையான காலப்பகுதியில் ஐரோப்பாவில் அதிஉச்ச வெப்பம் பதிவானது. வரலாறு காணாத வகையில் வெப்பத்தின் அளவு இருந்துள்ளது.
இந்த வெப்ப அலையின்போது பிரான்சில் 2,025 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே மிகக் கடுமையான இறப்பு வீதம் காணப்பட்டதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
பெல்ஜியத்தில் ஜூன் 18 முதல் 29 வரையான காலப்பகுதியில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 530 பேர் உட்பட சுமார் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வெப்ப அலையின்போது ஏற்பட்ட மரணங்களின் அளவு முன்னெப்போதும் இல்லாத ஒன்று என பெல்ஜியம் சுகாதார அமைச்சு விவரித்துள்ளது.
நெதர்லாந்து அதிகாரிகள் விடுத்துள்ள தகவலின்படி, அங்கு சுமார் 480 மேலதிக மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இதில் பெரும்பாலான மரணங்கள் 80 வயதிற்கு மேற்பட்டவர்களை உள்ளடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
