மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி (வயது 61) சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பிற்பகல் காலமானார்.
1965 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதி பிறந்த இவர், தனது ஆரம்பக் காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியமையுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய செய்தியாளராகப் பல முன்னணி ஊடகங்களில் திறம்பட ஊடகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அரசியல் களத்தில் கால் பதித்த அவர், கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, 44 ஆயிரத்து 457 விருப்பு வாக்குகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக முதன்முறையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில், கடந்த 2008 ஆம் ஆண்டு “அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவண நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பலத்த உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக, அவர் தனது குடும்பத்துடன் பிரித்தானியாவுக்குப் புலம்பெயர நேரிட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தாயகம் திரும்பிய அவர், பல்வேறு அரசியல் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அந்தவகையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி இணைப்பாளராக நியமிக்கப்பட்டு, அக்கட்சியின் அரசியல் மற்றும் பிரசாரப் பணிகளில் முன்னின்று உழைத்தார்.
அரசியல்வாதியாகவும், நேர்மையான ஊடகவியலாளராகவும் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இவரது திடீர் மறைவு, மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
