வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – கதிர்காமத்திற்கான பாரம்பரிய புனித பாதயாத்திரை, ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
ஸ்ரீ கதிர்காம கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற ஆடிவேல் விழா மகோற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
15 தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இத்திருவிழா, ஜூலை மாதம் 29 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
இலங்கையின் மிக நீண்ட இந்தப் பாதயாத்திரையில் கலந்துகொள்ள விரும்பும் அடியார்கள், ஜெயா வேல்சாமியுடன் 077-8386381 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தமது பங்கேற்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இம்முறை 95 யாத்திரிகர்கள் மாத்திரமே உள்வாங்கப்படவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
செல்வச்சந்நிதி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் இந்தப் பாரம்பரிய பாதயாத்திரை, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களையும் கடந்து செல்லவுள்ளது.
சுமார் 52 நாள்கள், 572 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்தப் பயணம், இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரையாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.










