இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நிறைவு: உயிரிழந்துவிட்டாரென அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் திரும்பியதால் பரபரப்பு

கல்கமுவ, கொஹோபன்குலம கிராமத்தில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தமது இறுதிச் சடங்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டிற்கு உயிருடன் திரும்பி வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொஹோபன்குலம பகுதியைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என அடையாளம் காணப்பட்ட இந்த நபர், வாரியப்பொல சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் காவலில் இருந்தபோதே உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்கு பொலிஸாரால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் கிராம மக்களும் உடனடியாக இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். கிராமம் முழுவதும் இரங்கல் பதாகைகள் கட்டப்பட்டு, பந்தல்கள் அமைக்கப்பட்டு, தகனக் கிரியைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், கீர்த்திசேன திடீரெனத் தனது வீட்டிற்கு உயிருடன் நடந்து வந்தார். தமக்காகவே தயார் செய்யப்பட்டிருந்த இறுதிச்சடங்கு வீட்டிற்குள் அவர் நடந்து வந்தது கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விசித்திரமான சம்பவத்தால் ஒட்டுமொத்த கிராம மக்களும் குழப்பத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

 

Related Articles

Latest Articles