நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம், புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்றிலும் மறந்து செயல்படுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபூர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது மற்றும் புதிய அரசியலமைப்பு ஒன்றை இயற்றுவது ஆகியவையே எதிர்க்கட்சியாக இருந்தபோது தேசிய மக்கள் சக்தியின் பிரதான நிலைப்பாடாக இருந்தது. அது குறித்த பல்வேறு கருத்துக்களையும் அக்கட்சியினர் தொடர்ந்து மக்கள் மத்தியில் முன்வைத்து வந்தனர்.
ஆனால், தேசிய மக்கள் சக்தி இன்று ஆட்சிக்கு வந்த பின்னர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து எவ்வித கருத்துக்களையும் முன்வைப்பதில்லை. இது தொடர்பான கலந்துரையாடல்களும் நடத்தப்படுவதில்லை.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு குறித்து தேசிய மக்கள் சக்தியினர் அன்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். ஆனால், இன்று அதே அரசியலமைப்பையே அவர்கள் பற்றிக்கொண்டுள்ளனர்.
அரசாங்கம் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அரசியலமைப்பு மறுசீரமைப்பை முற்றிலும் மறந்துவிட்டதுடன், அவர்களிடம் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை” என்று முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
