தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது விசேடமாக மலையக மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் ஹட்டன் பிரகடனத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொரு விடயங்களையும் நாம் பூர்த்தி செய்து வருகிறோம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
நேற்று (03.09.2026) களுத்துறை – மொஹமதியாவத்த அனர்த்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 17 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று எங்களால் ஆரம்பிக்கப்படும் வீட்டுத்திட்டங்கள் கடந்த காலங்களைப் போல் அல்ல. எம்மால் வழங்கப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வருகிறோம். அது மாத்திரமல்ல எம்மால் கையளிக்கப்படும் ஒவ்வொரு வீடுகளுக்குமான கடிதங்கள் அவர்கள் வீட்டு முகவரிக்கே செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம்.
எனவே மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அரசாங்கமாக நாம் செயற்பட்டு வருகிறோம்.
எம்மால் அமைக்கப்பட்டு வரும் 1300 வீடுகளில் 1000 வீடுகளை வெகு விரைவில் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், அதேப்போல் அமைக்கப்பட தீர்மானித்துள்ள 4700 வீடுகளில் 2500 வீடுகளை அமைப்பதற்கான நிலத்தெரிவுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
எனவே எமது வீட்டுத் திட்டமானது வெறுமனே ஒரு வீடல்ல மக்களின் புதிய வாழ்வு என்றார்.
எனவே இந்த அரசாங்கத்தோடு கைகோர்த்து, இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பது எம்மைப் போன்ற சாதாரண மக்கள் ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்பும் என்றார்.
இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வானது, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.










