ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனம் தனது பண்ணைகளை அவசரகால முடக்க நிலைக்கு (lockdown) கொண்டு சென்றுள்ள நிலையில், இரண்டாவது பறவை ஒன்றிற்கும் அதிதீவிரப் பறவைக் காய்ச்சல் H5N1 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவில், முதன்முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்ட brown skua பறவைக்கு அருகிலேயே, தற்போது northern giant petrel என்ற பறவையிலும் H5N1 வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பறவைகள் மத்தியில் பெருமளவிலான மரணங்கள் ஏற்பட்டதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்று ஆஸ்திரேலிய வேளாண்மைத் துறை அமைச்சர் ஜூலி காலின்ஸ் தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“இந்த H5 பறவைக் காய்ச்சல் ஆஸ்திரேலியாவின் வனவிலங்குகளிடமோ அல்லது நாட்டின் பிற பகுதிகளிலோ பரவியுள்ளதா, அல்லது இந்த இரண்டு பறவைகளுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்,” என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட அல்லது உயிரிழந்த பறவைகளை மக்கள் தொட வேண்டாம் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் முர்ரே வாட் அறிவுறுத்தியுள்ளார்.
வணிக ரீதியிலான கோழிப் பண்ணைகளில் இந்த வைரஸ் இன்னும் கண்டறியப்படாத போதிலும், நாட்டின் முன்னணி கோழி இறைச்சி உற்பத்தியாளரான Inghams Group , மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தனது அனைத்து பண்ணைகளிலும் சாத்தியமான அபாயங்களைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதுவரை இந்த அதிதீவிரப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லாத ஒரே கண்டமாக ஆஸ்திரேலியா இருந்து வந்த நிலையில், இந்த பாதிப்பை எதிர்கொள்ள தாங்கள் பல ஆண்டுகளாகத் தயாராகி வருவதாக தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி பெத் குக்சன் தெரிவித்துள்ளார்.
” இந்த இரண்டு தனிப்பட்ட பறவைகள் மூலம் ஆஸ்திரேலியாவின் பிற பறவை இனங்களுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளதா என்பதைப் புரிந்துகொள்வதே எங்களின் தற்போதைய முக்கிய நடவடிக்கையாகும்.
சர்வதேச அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இதன் தாக்கத்தை முடிந்தவரை குறைப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதே எங்களின் அணுகுமுறையாகும்,” என்று குக்சன் தெரிவித்தார்.
முக்கிய இடங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய உயிரினங்களைப் பாதுகாக்க 100-க்கும் மேற்பட்ட துரித நடவடிக்கை திட்டங்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் உருவாக்கியுள்ளதுடன், இதற்கான ஆயத்தப் பணிகளுக்காக சுமார் 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாயக் குழுக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வெளிநாடுகளில் ஏற்பட்ட பெருமளவிலான உயிரிழப்புகளையும், சில உயிரினங்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வீழ்ச்சியையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.










