யாழில் வீடு கையளிப்பு!

யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் மீசாலை கிழக்கில் இன்று (28) நடைபெற்ற வீடு கையளிப்பு நிகழ்வு, ஒரு சாதாரண நிகழ்வாக அல்லாமல், மனித வாழ்வின் மரியாதை, நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் முக்கிய தருணமாக அமைந்தது.

ஜனவரி 16ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த வீடமைப்பு திட்டத்தின் கீழ், 20 இலட்சம் ரூபா பெறுமதியில் மூன்று மாதளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு, இன்று உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு, வீட்டை திறந்து வைத்து பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

இந்த வீடு, வெறும் கட்டிடம் அல்லாது, ஒரு குடும்பத்தின் பாதுகாப்பு, குழந்தைகளின் கனவுகள், பெற்றோரின் நிம்மதி மற்றும் எதிர்கால நம்பிக்கையை பிரதிபலிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

அரசாங்கம் மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நடைமுறையில் நிறைவேற்றும் முயற்சியின் ஓர் எடுத்துக்காட்டாக இந்த திட்டம் கருதப்படுவதுடன், வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் சமத்துவமான அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.

“சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை” என்ற அடிப்படையில், மேலும் பல குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் பணிகள் தொடரும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமுான சுந்தரமூர்த்தி கபிலன், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ், பிரதேச சபை உறுப்பினர் திருமதி. வெண்ணிலா, சமூக சக்தியின் தவிசாளர் திரு.ம.கஜன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

Latest Articles