சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை.
எனினும், நடைமுறைப்படுத்த வேண்டியவற்றை சட்டத்தைக் கொண்டு வந்து அரசு நடைமுறைப்படுத்துமென சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டை பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் வகையில் அனைவரும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்ட அமைச்சர், பல்வேறு கருத்துகள் நிலவும் நிலையில் அது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பான ஜனாதிபதியின் உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
சர்வதேச நாணய நிதியம் என்பது அமெரிக்காவின் ஒரு வங்கியல்ல. அவ்வாறு எண்ணிக்கொண்டே பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 196 நாடுகளில் பெருமளவு நாடுகள் அதில் அங்கத்துவம் வகிக்கின்றன. அது ஒரு நிதியம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்த நிதியத்தின் பெரும் பகுதியை அமெரிக்கா கொண்டுள்ளது. அதற்கு அடுத்ததாக ஜப்பான், சீனா போன்ற நாடுகள் உள்ளன.
நாம் சீனாவிடமும் 7 பில்லியன் டொலருக்கும் அதிகமான இருதரப்பு கடனைப் பெற்றுக்கொண்டுள்ளோம். அது பிரத்தியேகமானது.
அவ்வாறு பெருமளவு நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் நிதியத்திடமே எமது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக நாம் கடன் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டுள்ளோம்.
நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் 16 தடவைகள் சென்றுள்ளோம்.
இம்முறை நாம் கண்டிப்பாக செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஏனெனில், வேறு எந்த நாடுகளும் எமக்கு கடன் தராத நிலைமையே காணப்பட்டது. கொடுத்த கடன்கள் அத்தனையையும் அந்த நாடுகள் நிறுத்தின. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு வங்குரோத்து அடைந்தது. அப்போது அதற்கு ஆதரவாக பேசிய அப்போது அமைச்சரவையில் இருந்தவர்களே இப்போது பல்வேறு எதிர் கருத்துகளை முன் வைக்கின்றனர். நாம் அப்போது அமைச்சரவையில் இருக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்கின்றமை தொடர்பில் தர்க்கங்கள் காணப்படுகின்றன. அது வேறு விடயம். எமக்கும் சில மாற்றுக் கருத்துகள் உள்ளன.
எந்த வங்கிகளிலும் எந்த நாட்டிலும் கைமாற்று முறையிலாவது கடன் பெற முடியாத ஒரு நிலையிலேயே சர்வதேச நாணய நிதியம் எமக்கு கை கொடுத்தது.
அவ்வாறு அந்த நிதியம் வழங்கும் 2.9 பில்லியன் டொலர் நிதியானது கிடைத்துள்ள நிலையில், இப்போது எமக்கு கடன் பற்றுப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு நிபந்தனை தான் ஊழல் மோசடிகளை நிறுத்துவது. அந்தச் சட்டம் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.










