மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவை வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி, நாடாளுமன்றத்தில் வெளிகொணர்ந்ததை அடுத்து, பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்க அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்வைத்துள்ளார்.
மஸ்கெலிய வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்களை பரிசோதனை செய்யும் ஸ்கேன் இயந்திரம் இல்லாமை மற்றும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் உள்ளிட்ட ஊழியர் பற்றாக்குறை தொடர்பில் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்றத்தில் இன்று (20) கருத்து வெளியிட்டிருந்தார்.
ஜீவன் தொண்டமானின் உரை நிறைவடைந்ததை அடுத்து, சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, தொலைபேசியின் ஊடாக ஜீவன் தொண்டமானை தொடர்புக் கொண்டு, குறித்த வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து முழுமையான தகவல்களை கேட்டறிந்துக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தொலைபேசியூடாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனியையும், ஜீவன் தொண்டமானையும் நேரடியாக கலந்துரையாட இணைப்புக்கு எடுத்துள்ளார்.
இதன்போது, மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவை வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் மூவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
இந்த நிலையில், மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கர்ப்பணித் தாய்மார்களை பரிசோதிக்கும் ஸ்கேன் இயந்திரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனிக்கு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், பொகவந்தலாவை வைத்தியசாலையில் காணப்படும் மருத்துவர் உள்ளிட்ட ஊழியர் பற்றாக்குறை தொடர்பில் ஆராய்ந்து, உடனடி தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனிக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க உடனடியாக தீர்வு வழங்கியுள்ளார்.
சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, வெளிநாட்டு விஜயமொன்றில் ஈடுபட்டுள்ள பின்னணியிலேயே, சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனியை, அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த தொலைபேசியூடான கலந்துரையாடலில் இணைந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மலையக மக்கள் எதிர்நோக்கிவரும் காணி, வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
அத்துடன், மலையக பகுதிகளில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களை, தேசிய மக்கள் சக்தியின் பிரதேச அரசியல்வாதிகள் இடையூறு விளைவித்தமை தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனத்திற்கு ஜீவன் தொண்டமான் கொண்டு வந்திருந்தார்.










