பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள 1750 ரூபா சம்பளம் இன்று வழங்கப்படவுள்ளது.
அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேறும் நிலையில், இன்றைய தினம் அவர்கள் பெற்றுக்கொள்ளும் சம்பளத்துடன் அதிகரித்த தொகையையும் பெறுகின்றனர்.
இந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த அரசாங்கங்களின் காலத்தில் தொடர்ந்தும் பெரும் இழுபறி நிலையிலிருந்த சம்பள அதிகரிப்பு பிரச்சினைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலையிட்டு தீர்வு பெற்றுக் கொடுத்தமை தொடர்பில், தோட்டத் தொழிலாளர்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
கடந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளத்தை, தமது அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் என வாக்குறுதியளித்திருந்தார்.
இது தொடர்பில் தோட்டக் கம்பெனிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன் இறுதியில் அரசாங்கம் 200 ரூபா கொடுப்பனவையும் தோட்டக் கம்பெனிகள் மேலும் 200 ரூபாவையும் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டன.
அதற்கிணங்கவே இன்றைய தினம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் கைகளில் கிடைக்கவுள்ளது.இதன்படி கடந்த வாரம் கொழும்பில் அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தொழில் திணைக்களத்துடன் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.கொழும்பில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் படி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்துடன் மேலும் 200 ரூபாவை அதிகரித்து வழங்க பெருந்தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவித்திருந்தன.
இந்த அதிகரிப்பு கடந்த ஜனவரியிலிருந்து கணக்கிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அத்துடன் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வருகைக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 200 ரூபா வழங்கப்படுமென தெரிவித்திருந்த ஜனாதிபதி, அதற்காக 5000 மில்லியன் ரூபா நிதியையும் ஒதுக்கியிருந்தார்.
அதனையடுத்து பெருந்தோட்டக் கம்பனிகளும் 200 ரூபாவை வழங்குவதற்கு சட்டபூர்வமாக ஒப்புதலளித்தன. அதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களது சம்பளத்தில் மொத்தமாக 400 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் நீண்ட காலக் கனவாக இருந்த இந்த சம்பள அதிகரிப்பு பெரும் ஆறுதலளிப்பதாகத் பெருந்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எந்தவித போராட்டங்களும் இன்றி முதல் தடவையாகக் கிடைத்த சம்பள அதிகரிப்பு இதுவென அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் அதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் தமது நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.
நன்றி தினகரன்
