“மாகாண சபைத் தேர்தலை அநுர அரசு நடத்தும் என எதிர்பார்க்கின்றோம். அதற்கான அழுத்தத்தை ரில்வின் சில்வா உள்ளிட்டவர்களுக்கு இந்தியா கொடுக்கும் என நம்புகின்றோம்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அநுர அரச தரப்பினர் பின்வாங்கி வருகின்றமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடத்துவதாகவே அநுர அரசு தெரிவித்திருந்தது. அத்துடன் வரவு – செலவு திட்டத்திலும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதனால் மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்தும் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் இருக்கின்றோம்.
தற்போது மக்கள் விடுதல முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட சிலர் இந்தியாவுக்குச் சென்றிருக்கின்றனர். மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா ரில்வின் சில்வாவுக்கு ஓரளவு அழுத்தம் கொடுக்கும் என நினைக்கின்றோம். அதனால் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் நாட்டின் உண்மைத்தன்மையை மக்களுக்குக் காட்ட முடியுமாகும்.
மேலும் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறுமாக இருந்தால், நாங்கள் கூட்டணி அமைத்தே போட்டியிடுவோம். எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பாலமாகவே இருக்கின்றது. அதனால் கூட்டணி அமைப்பது தொடர்பில் தற்போது நாங்கள் அனைவருடனும் கலந்துரையாடி வருகின்றாேம்.
அத்துடன் கூட்டணி அமைக்கும் விடயத்தில். எதிர்கால அரசியல் நடவடிக்கைகளைக் கருத்தில்கொண்டு நாங்கள் முதலாவதாக இணைந்து செயற்பட முயற்சிப்பது ஐக்கிய மக்கள் சக்தியுடனாகும். அதனைத் தொடர்ந்து ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றாேம்.” – என்றார்.
