ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் தொடங்கியுள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரானில் மில்லியன் கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கடந்த பிப்ரவரி 28 அன்று 86 வயதான அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தத் தாக்குதல் ஒரு பிராந்தியப் போராக வெடித்து, உலகப் பொருளாதாரத்தையும் பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியது.
1989-ஆம் ஆண்டு முதல் ஈரானை வழிநடத்தி வந்த அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, அங்கு ஒரு வார கால இறுதிச் சடங்கு நிகழ்வுகள் சனிக்கிழமை அதிகாலை தெஹ்ரானின் இமாம் கொமேனி கிராண்ட் மொசல்லா மசூதியில் தொடங்கின.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் ஜூலை 4-ஆம் திகதியன்றே, ஈரான் இந்த இறுதிச் சடங்கு ஊர்வலங்களை திட்டமிட்டுத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் அஞ்சலி: கறுப்பு உடைகள் அணிந்து, நாட்டின் தேசியக் கொடிகள் மற்றும் அலி கமேனி, அவரது மகனும் அடுத்த வாரிசுமான மொஜ்தபா கமேனியின் புகைப்படங்களை ஏந்தியவாறு பல்லாயிரக்கணக்கான மக்கள் மசூதியை நோக்கி அணிவகுத்து வருகின்றனர்.
பாதுகாப்புச் சாவடிகளைக் கடந்து செல்லும் போது மக்கள் “இஸ்ரேலுக்கு மரணம், அமெரிக்காவுக்கு மரணம்” என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
தெஹ்ரானைத் தொடர்ந்து அலி கமேனியின் உடல் ஈரான் மற்றும் ஈராக்கின் முக்கிய ஷியா மத மையங்களான நஜாஃப் (Najaf), கர்பலா (Karbala) மற்றும் கும் (Qom) ஆகிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வரும் வியாழக்கிழமை மஷாத் (Mashhad) நகரில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக லெபனானின் ஹெஸ்புல்லா, காசாவின் ஹமாஸ் மற்றும் யேமனின் ஹவுதி அமைப்புகளை ஒருங்கிணைத்து, மத்திய கிழக்கில் ஈரானின் ராணுவக் கூட்டணியை (Axis of Resistance) பலப்படுத்தியதில் அலி கமேனி மிக முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










