அமெரிக்கா – ஈரான் பேச்சு தோல்வியடைந்த நிலையில், “நம்மை முற்றிலுமாக அழித்துவிடுவோம் என்று ஈரான் அச்சுறுத்தியது. ஆனால், இப்போது அவர்களே உயிர் பிழைக்கப் போராடுகிறார்கள்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,
“ஈரானுக்கு எதிரான நடவடிக்கை மூலம், அவர்களின் அணு ஆயுதம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை நசுக்குவதில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை, ஆனால் நாம் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளோம் என்பது ஏற்கெனவே தெளிவாகியுள்ளது.
காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, சிரியாவில் அசாத் ஆட்சி, ஈராக்கில் உள்ள போராளிக் குழுக்கள், ஏமனில் ஹவுதிகள் என ஈரான் நம் கழுத்தை நெரித்துச் சுற்றி வளைக்க முயன்றது. ஆனால் நாம் தான் அவர்களின் கழுத்தை நெரிக்கிறோம். அவர்கள் நம்மை முற்றிலுமாக அழித்துவிடுவதாக அச்சுறுத்தினார்கள். ஆனால், இப்போது அவர்களே உயிர்பிழைக்கப் போராடுகிறார்கள்” என்று கூறினார்.
பாகிஸ்தானில் அமெரிக்காவும் ஈரானும் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நெதன்யாகுவின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்தன. அமெரிக்கா – ஈரான் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.










