அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஆக்கபூர்வமான பேச்சுகள் நடைபெறுவதால் ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கின. இதையடுத்து, ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மேலும், ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளதால், அந்த பாதையில் கப்பல் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில்,
‘‘அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் விரோதப் போக்குகளுக்கு ஒரு முழுமையான மற்றும் நிரந்தரமான தீர்வு காண்பது குறித்து, கடந்த இரண்டு நாட்களாக மிகச் சிறந்த மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆழமான, விரிவான மற்றும் ஆக்கபூர்வமான இந்த பேச்சுகள் இந்த வாரம் முழுவதும் தொடர இருக்கிறது.
இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஈரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது மேற்கொள்ள இருந்த அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு போர் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் இன்று (திங்கள்கிழமை) எண்ணெய் விலை 10 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது.










